Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகபூண்டி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமுருகபூண்டி
இறைவன் பெயர்திருமுருகநாதஸ்வாமி
இறைவி பெயர்ஆவுடைநாயகி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது கொங்கு நாட்டில் உள்ள மற்றொரு சிவஸ்தலமான அவினாசியில் இருந்து 5 Km தொலைவில், அவினாசி - திருப்பூர் சாலை வழியில் திருமுருகபூண்டி உள்ளது.

கோவில் அமைப்பு: மேற்கு திசை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த கோவிலில் மற்ற கோவில்களைப் போல நுழைவு கோபுரம் இல்லை. சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் நான்கு புறமும் உயர்ந்த மதில் சுவர்களை உடையதாய் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. கோவிலின் மூலவரான திருமுருகநாதர் சிவலிங்க ரூபத்தில் சுமார் 2 1/2 அடி உயரம் உள்ளதாக தரிசனம் தருகிறார். மேற்குப்பார்த்து மூலவர் சந்நிதி உள்ளது. மூலவர் சந்நிதியின் வலது பக்கம் தெற்குப் பார்த்த நிலையில் ஆறு முகங்களுடன் காணப்படும் முருகன் சந்நிதி உள்ளது. 5 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் முன்பக்கம் 5 தலைகளும், பின்பக்கம் ஒரு தலையும் உடையதாக அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியின் இடதுபுறம் மேற்குப் பார்த்த நிலையில் அம்பாள் ஆவுடைநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது.

கோவிலுக்கு உள்ளே சண்முக தீர்த்தமும், கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தமும், ஞான தீர்த்தமும் இருக்கிறது. சித்த பிரமை பிடித்தவர்களை இந்த்ச் சிவஸ்தலத்திற்கு அழைத்து வந்து தங்கியிருக்கச் செய்து அன்றாடம் மூன்று தீர்த்தங்களிலும் நீராடச் செய்து சுவாமியை வழிபட்டுவர அவர்களுடைய சித்த பிரமை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தல புராணம்: புராணங்களின் படி முருகப்பெருமான் அரக்கன் சூரபத்மனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிகொள்ளும் பொருட்டு இந்த சிவஸ்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை நிறுவி அதற்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம்.

சேரமான் பெருமான் நாயனாரிடம் பெற்ற பரிசுப் பொருள்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்த சுந்தரர் திருமுருகபூண்டி அருகே வரும் போது சிவபெருமான் தனது பூதகணங்களை வழிப்பறி திருடர்கள் வேடத்தில் அனுப்பி சுந்தரரின் பரிசுப் பொருள்களை கொள்ளையடித்து வரச் செய்தார். கவலை அடைந்த சுந்தரர் திருமுருகபூண்டி சென்று இறைவன் மேல் பதிகம் பாடி முறையிட்டார். இறைவன் நேரில் தோன்றி கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீண்டும் சுந்தரரிடம் ஒப்படைத்தார். இதற்குச் சான்று கூறும் வகையில் இக்கோவிலில் உள்ள மண்டபத்தில் வில் கையில் ஏந்தியபடி வேட்டுவன் கோலத்தில் நிற்கும் சிவபெருமான் சிற்பமும், இதற்கு எதிரில் சுந்தரர் கவலையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கும் இரு சிற்பங்கள் காணப்படுகின்றன. பரிசுப் பொருள்களை பறி கொடுத்த நிலை ஒன்று, பறி கொடுத்த பொருள்களை மீண்டும் பெற்ற நிலை மற்றொன்று ஆக இந்த இருநிலைகளைக் காட்டும் வகையில் இருப்பதே சுந்தரரின் இந்த இரண்டு சிற்பங்கள்.

இத்தலத்து விநாயகர் கூப்பிடு விநாயகர் என்ற பெயரில் இங்கு காட்சி தருகிறார். சுந்தரரின் பரிசுப் பொருள்கள் சிவபெருமானால் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு விநாயகர் சுந்தரரைக் கூப்பிட்டு பொருள் இருக்கும் இடத்தைக் காட்டி அருளியதால் அவர் கூப்பிடு விநாயகர் என்ற பெயர் பெற்றார்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம். திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களை திருப்பித் தரும்படி இறைவனிடம் பாடி முறையிட்ட பதிகம் இதுவாகும்.

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவ லாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்
டாற லைக்கு மிடம்
முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர்
விரவ லாமை சொல்லிக்
கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங்
கூறை கொள்ளு மிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
எல்லைக் காப்பதொன் றில்லை யாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

பசுக்க ளேகொன்று தின்று பாவிகள்
பாவ மொன் றறியார்
உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங்
கட்டி வெட்டன ராய்ச்
சூறைப் பங்கிய ராகி நாடொறுங்
கூறை கொள்ளு மிடம்
மோறை வேடுவர் கூடிவாழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏறு காலிற்ற தில்லை யாய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

தயங்கு தோலை உடுத்த சங்கரா
சாம வேத மோதி
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும்
மார்க்க மொன்றறி யீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன்
பூண்டி மாநகர் வாய்
இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

விட்டி சைப்பன கொக்க ரைகொடு
கொட்டி தத்த ளகங்
கொட்டிப் பாடுமித் துந்து மியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண்
கோவணந் தற்ற யலே
ஓதம் மேவிய ஒற்றி யூரையும்
முத்தி நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏது காரணம் எது காவல்கொண்
டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத்
தோள்வ ரிநெடுங் கண்
மடவ ரல்லுமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
முடவ ரல்லீர் இடரிலீர் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இடவ மேறியும் போவ தாகில்நீர்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண்
பற்ற லைக லனா
வேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர்
பாகம் வைத்து கந்தீர்
மோந்தை யோடு முழக்கறா முருகன்
பூண்டி மாநகர் வாய்
ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும்
எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே. 

முந்தி வானவர் தாந்தொழு முருகன்
பூண்டி மாநகர் வாய்ப்
பந்த ணைவிரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்த வனைச்
சிந்தை யிற்சிவ தொண்ட னூரன்
உரைத்தன பத்துங் கொண்
டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர்
ஒன்றுந் தாமி லரே. 
கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்
திருநணா ( பவானி ) திருச்செங்கோடு கருவூர் ( கரூர் )
திருப்பாண்டிக்கொடுமுடி அவினாசி (திருப்புக்கொளியூர்) வெஞ்சமாக்கூடல்


காவிரிக்கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகிறது. அவையாவன: 1. திருவெண்காடு, 2. திருவையாறு, 3. மயிலாடுதுறை, 4. திருவிடைமருதூர், 5. ஸ்ரீவாஞ்சியம், 6. திருசாய்க்காடு (சாயாவனம்)