Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

விகிர்த நாதேஸ்வரர் கோவில், வெஞ்சமாக்கூடல்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வெஞ்சமாக்கூடல்
இறைவன் பெயர்விகிர்த நாதேஸ்வரர்
இறைவி பெயர்விகிர்தேஸ்வரி
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது கரூரில் இருந்து அரவங்குறிச்சி செல்லும் சாலையில் சுமார் 15 Km தென்மேற்கே பயணம் செய்து, பிறகு அங்கிருந்து ஒரு கிளைச் சாலயில் சுமார் 8 Km சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம்.

கோவில் விபரங்கள்: குடகனாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் உள்ள இறைவன் விகிர்த நாதேஸ்வரர் என்றும், இறைவி விகிர்த நாதேஸ்வரி என்றும் அறியப்படுகிறார்கள். மூலஸ்தானத்தில் உள்ள பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் 5 அடி உயரமும், அம்பாளின் உருவச் சிலை 2.5 அடி உயரமும் உள்ளது. தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து பாடலுக்குப் பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் வெளிச்சுற்றுச் சுவரில் காமதேனு லிங்கத்திற்கு பால் சொரிவது போன்ற சின்னங்கள் நிறைய காணப்படுகின்றன. பாண்டியர் காலத்து கல்வெட்டுகளில் இருந்து பாண்டிய மன்னர்கள் இக்கோவிலுக்குச் செய்த தானங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம்

எறிக்குங் கதிர்வே யுதிர்முத் தமொடு
மிலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
வடிவேற்கண் நல்லார்பலர் வந்திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாட் டெங்குங்
குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியாய்
தண்ணா ரகிலுந் நலசா மரையும்
அலைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப
மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

துளைவெண் குழையுஞ் சுருள்வெண் டோ டுந்
தூங்குங்காதிற் றுளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
கலந்தார்க்கருள் செய்திடுங் கற்பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்
பிறவாதவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்
சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்
புரந்தீயெழ ஓடுவித்தாய் அழகார்
முழவா ரொலிபா டலோடா டலறா
முதுகாடரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

கடமா களியா னையுரித் தவனே
கரிகாடிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்
நல்லாய் நறுங்கொன்றை நயந்தவனே
படமா யிரமாம் பருத்துத்திப் பைங்கண்
பகுவாய் எயிற்றோடழ லேஉமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

காடும் மலையுந் நாடு மிடறிக்
கதிர்மாமணி சந்தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
பணைத்தோளியர் பாடலோ டாடலறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே
கொடுகொட்டி யோர்வீணை யுடையவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
பொதியும்புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே.

வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
வடிவேற்க ணல்லார்பலர் வந்திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியேனையும்
வேண்டுதி யேயென்று தான்விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
வனப்பகையப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொற்றமிழ் மாலைகள் பத்தும் வல்லார்
சிவலோகத் திருப்பது திண்ணமன்றே.
கொங்கு நாட்டில் உள்ள மற்ற சிவஸ்தலங்கள்
திருநணா (பவானி) திருச்செங்கோடு கருவூர் (கரூர்)
திருமுருகபூண்டி திருப்பாண்டிக்கொடுமுடி திருப்புக்கொளியூர் (அவிநாசி)