Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவண்ணாமலை
இறைவன் பெயர்அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்
இறைவி பெயர்உண்ணாமலை அம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 3
திருஞானசம்பந்தர் - 2
எப்படிப் போவது சென்னையில் இருந்து சுமார் 190 Km தொலைவில் திருவண்ணாமலை சிவஸ்தலம் உள்ளது. தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து வசதிகள் திருவண்ணாமலைக்கு உண்டு. விழுப்புரம் - காட்பாடி ரயில் பாதையில் திருவண்ணாமலை ரயில் நிலையம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
அருணாசலேஸ்வரர் திருக்கோவில்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 606601

காசியில் இறக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தைத் தரிசித்தால் முக்தி. ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. காசியில் இறப்பது எல்லோருக்கும் வாய்க்காது. திருவாரூரில் பிறப்பது நம் செயல் அன்று. சிதம்பரத்திற்கு நேரில் சென்று தரிசிப்பது என்பது எல்லோராலும் இயலாது. ஆனால் திருவண்ணாமலையை ஒரு முறையேனும் நினைப்பது யாவருக்கும் எளிதான செயலே. அவ்வாறு ஒரு முறை நினைத்தாலும் முக்தி எளிதில் வாய்க்கும் என்ற சிறப்பை உடையது திருவண்ணாமலை தலம்.

தல வரலாறு: ஒரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவிற்கும், காக்கும் கடவுளான மஹாவிஷ்னுவிற்கும் அவர்கள் இருவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களின் அறியாமையை அகற்றிட சிவபெருமான் அவர்கள் முன் சோதி வடிவம் கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றார். வராக அவதாரம் எடுத்த திருமால் பூமியைக் குடைந்து சென்றார். பிரம்மா அன்னப் பறவை உருவெடுத்து உயரப் பறந்து சென்றார். இருவராலும் சோதியின் அடி முடியைக் காண இயலவில்லை. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதைப் புரிந்து கொண்ட இருவரும் அவரை வணங்கினர். சிவபெருமானும் அவர்களுக்கு சோதி வடிவிலிருந்து ஓர் மலையாக மாறி காட்சி கொடுத்தார். அதுவே இத்தலமான அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதறகு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார்.

ஆலயச் சிறப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயம் தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் ஒன்றாகும். ஆறு பிரகாரங்களும், ஏழு கோபுரங்களும், பல மண்டபங்களும், பல சந்நிதிகளும் கொண்ட இந்த ஆலயம் எல்லோராலும் தரிசிக்க வேண்டிய புண்ணியத் தலங்களில் முதண்மையானதாகும். இறைவன் இத்தலத்தில் சுயம்பு லிங்கத் திருமேனியாக நாகக் கிரீடம் அணிந்து தூய வெண்ணிற ஆடையுடன் அருணாசலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் ஈசனின் பின்புறம் லிங்கோத்பவர் எழுந்தருளியிருக்கிறார். லிங்கோத்பவராக சிவபெருமான் முதன்முதலாக காட்சி கொடுத்தது இத்தலத்தில் என்பதால் மற்ற ஆலயங்களில் இல்லாத அளவிற்கு தனி அலங்காரத்துடன் இவர் காட்சி தருகிறார்.இறைவன் சந்நிதியை அடுத்து உண்ணாமலை அம்மை தனிக் கோவிலில் கருவறையில் சிறிய உருவில் அருட்காட்சி தருகிறாள்.