Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சத்தபுரீசுவரர் கோவில், திருகோலக்கா
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருகோலக்கா |
| இறைவன் பெயர் | சப்தபுரீசுவரர், தாளபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் | ஓசைகொடுத்த நாயகி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருகோலக்கா என்ற சிவஸ்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கப்படுகிறது. |
| ஆலய முகவரி | அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோவில் திருக்கோலக்கா சீர்காழி அஞ்சல் சீர்காழி வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் PIN - 609110 இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சமந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும் நன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும் கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக் கோலக் காவினிற் கண்டு கொண்டேனே.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. கிழக்கி நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிறார். முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது. இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள். திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. இரண்டாவது பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சந்நிதியை அடையலாம்.
பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை பெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள பொற்றாளம் கோவிலில் உள்ளது.
திருகோலக்கா ஆலயம் புகைப்படங்கள்
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ. பெண்டான் பாகமாகப் பிறைச் சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை உலக முய்யவே. பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக் கோணற் பிறையன் குழகன் கோலக்கா மாணப் பாடி மறைவல் லானையே பேணப் பறையும் பிணிக ளானவே. தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே. மயிலார் சாயல் மாதோர் பாகமா எயிலார் சாய எரித்த எந்தைதன் குயிலார் சோலைக் கோலக் காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே. வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே. நிழலார் சோலை நீல வண்டினங் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலால் மொய்த்த பாதங் கைகளாற் தொழலார் பக்கல் துயர மில்லையே. எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்றனை முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் குறியார் பண்செய் கோலக் காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில் ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக் கூற்ற முதைத்த குழகன் கோலக்கா ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே. பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் உற்ற துவர்தோ யுருவி லாளருங் குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவப் பறையும் பாவமே. நலங்கொள் காழி ஞான சம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே. 1.23.11
