கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில், திருவேள்விக்குடி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவேள்விக்குடி |
| இறைவன் பெயர் | கல்யாணசுந்தரேஸ்வரர் |
| இறைவி பெயர் | பரிமளசுகந்த நாயகி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 (திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகம்) சுந்தரர் - 2 (திருத்துருத்தி, திருவேள்விக்குடி ஆகிய இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவான பதிகம்) |
| எப்படிப் போவது | மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 5 கி.மி. தொலைவில் திருவேள்விக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. குத்தாலத்தில் இருந்து திருவேள்விக்குடி செல்ல ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு. |
தல வரலாறு: ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார்.
சுய உருவம் பெற்ற அம்பிகை ஈசனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து மனலால் லிங்கம் செய்து வைத்து பூஜை செய்து வர 17வது திங்கட்கிழமை சிவபெருமான் தோன்றி ஈஸ்வரியை திருமணம் செய்து கொண்டார் என்று தல புராணம் கூறுகிறது. பார்வதி சிவன் கல்யாணம் நடப்பதற்கு முன் செய்ய வேண்டிய திருமண சடங்குகள், கங்கண தாரணம், யாகம் வளர்த்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முதலியன இத்தலத்தில் தான் நடைபெற்றன. பிரம்மா தானே முன் நின்று திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது
கோவில் அமைப்பு: இங்குள்ள கோவில் 3 நிலையுடன் கூடிய இராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். கணபதி, நடராஜர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகரர், அர்த்தநாரீஸ்வரர் ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது. அகத்தியருக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருக்கிறது. செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன.
இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்றது.