Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

அழகுசடைமுடிநாதர் கோவில், வடகுரங்காடுதுறை

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்வடகுரங்காடுதுறை
இறைவன் பெயர்குலைவணங்குநாதர், தயாநிதீஸ்வரர், வாலிபுரீஸ்வரர்
இறைவி பெயர்அழகுசடைமுடி அம்மை, ஜடாமகுட நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவையாற்றிற்கு அருகில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மி. தொலைவு.


வாலியும், சுக்ரீவனும் வழிபட்ட இரண்டு சிவஸ்தலங்கள் குரங்காடுதுறை என்ற பெயரில் இருக்கின்றன. திருவையாறு அருகே காவிரியின் வடகரையில் உள்ளதால் இத்தலம் வடகுரங்காடுதுறை என்று வழங்கப்படுகிறது. வாலி இராவணனுடன் போரிட்ட சமயத்தில் அறுந்த வால் வளர இத்தலத்து இறைவனை வழிபட்டான். வாலி வழிபட்டதால் இறைவனுக்கு வாலிபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இவ்வாலயம் 5 நிலைகளைக் கொண்ட கோபுரத்துடனும் இரண்டு பிரகாரங்களுடனும் காணப்படுகிறது. ஆலய விமானத்தில் வாலி இறைவனை வழிபடும் சிற்பமும், ஈசன் கர்ப்பிணிப் பெண்ணிற்கு தென்னங்குலை வளைத்த சிற்பமும் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளது.

இத்தலத்தில் நல்ல வெய்யில் காலத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருமுறை நடந்து வந்து கொண்டிருந்தாள். வெய்யிற் காலமானதால் தாகம் தாங்க முடியவில்லை. தாகமும், களைப்பும் மேலிட அவள் மயக்கமுற்றாள். இதலத்தில் கோவில் கொண்டுள்ள ஈசன் இதை அறிந்தார். தாயுமானவராக திருச்சிராப்பள்ளியில் ஒரு பக்தைக்கு அருள் செய்த இறைவன் இங்கு அருகிலிருந்த தென்னங்குலைகளை வளைத்தார். இளநீரை அந்தப் பெண் அருந்த வழி செய்து கொடுத்தார். இறைவனருளால் அப்பெண் தாகம் நீங்கி புத்துணர்வு அடைந்தாள். தென்னங்குலைகளை வளைத்து அருள் புரிந்ததால் இறைவன் குலைவணங்குநாதர் என்று பெயர் பெற்றார்.

கருவறையில் சற்று குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார் குலைவணங்குநாதர். அம்மன் சந்நிதியில் இறைவி அழகுசடைமுடி அம்மை சிரத்தில் உயர்ந்த சடாமுடியுடன் அழகுடன் காட்சி தருகிறாள். பௌர்ணமி நாட்களில் அம்மன் அலங்காரம் மிகவும் அழகுடன் இருக்கும். பௌர்ணமி அன்று மாலை வேளையில் ஒன்பது மஞ்சள் கொண்டு மாலை தொடுத்து அம்மனுக்கு அணிவிப்பது எல்லா தோஷங்களையும் நீக்கும் என்று பக்தர்களின் நம்பிக்கை. கர்ப்பிணிப் பெண்கள் இத்தல இறைவனை வணங்கி வந்தால் எவ்வித தொல்லையும் இன்றி சுகப்பிரசவம் நடக்கும்.

இத்தலத்தில் ஹனுமான் சிவபெருமானை பூஜை செய்துள்ளார். கருவறையைச் சுற்றி வரும்போது காணப்படும் தட்சினாமூர்த்தி சந்நிதி மிகவும் விசேஷமுடையதாகும். இவரை மனமாற பிரார்த்திதால் குருபலம் பெருகும். மேலும் இவ்வாலயத்தில் விஷ்னு துர்க்கை மிகவும் சக்தி உடைய தெய்வம். எட்டு கைகளுடன் காணப்படும் துர்க்கைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீலநிறமாக மாறிவிடுவது சிறப்பாகும். இத்தலத்தில் துர்க்கைக்கு ராகுகாலபூஜை செய்யும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம்.

அருணகிரிநாதரின் திருப்புகழில் இத்தல முருகப்பெருமான் மீது 3 பாடல் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் வள்ளி தேவசேனாதேவி சமேதராக மயிலுடன் எழுந்தருளியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை
வேங்கையே ஞாழலே விம்முபா திரிகளே விரவியெங்கும்
ஓங்குமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
வீங்குநீர்ச் சடைமுடி அடிகளா ரிடமென விரும்பினாரே. 

மந்தமா யிழிமதக் களிற்றிள மருப்பொடு பொருப்பின்நல்ல
சந்தமார் அகிலொடு சாதியின் பலங்களுந் தகையமோதி
உந்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
எந்தையார் இணையடி இமையவர் தொழுதெழும் இயல்பினாரே. 

முத்துமா மணியொடு முழைவளர் ஆரமும் முகந்துநுந்தி
எத்துமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மத்தமா மலரொடு மதிபொதி சடைமுடி யடிகள்தம்மேற்
சித்தமாம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணமன்றே. 

கறியுமா மிளகொடு கதலியின் பலங்களுங் கலந்துநுந்தி
எறியுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
மறியுலாங் கையினர் மலரடி தொழுதெழ மருவுமுள்ளக்
குறியினா ரவர்மிகக் கூடுவார் நீடுவா னுலகினூடே. 

கோடிடைச் சொரிந்ததே னதனொடுங் கொண்டல்வாய் விண்டமுன்னீர்
காடுடைப் பீலியுங் கடறுடைப் பண்டமுங் கலந்துநுந்தி
ஓடுடைக் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
பீடுடைச் சடைமுடி யடிகளா ரிடமெனப் பேணினாரே. 

கோலமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி
வாலியார் வழிபடப் பொருந்தினார் திருந்துமாங் கனிகளுந்தி
ஆலுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
நீலமா மணிமிடற் றடிகளை நினையவல் வினைகள்வீடே. 

இப்பதிகத்தில் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று. 	

நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க
வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னுகோயில்
ஏலமோ டிலையில வங்கமே யிஞ்சியே மஞ்சளுந்தி
ஆலியா வருபுனல் வடகரை யடைகுரங் காடுதுறையே. 

பொருந்திறல் பெருங்கைமா வுரித்துமை யஞ்சவே யொருங்குநோக்கிப்
பெருந்திறத் தனங்கனை அநங்கமா விழித்ததும் பெருமைபோலும்
வருந்திறற் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறை
அருந்திறத் திருவரை யல்லல்கண் டோ ங்கிய அடிகளாரே.

கட்டமண் தேரருங் கடுக்கடின் கழுக்களுங் கசிவொன்றில்லாப்
பிட்டர்தம் அறவுரை கொள்ளலும் பெருவரைப் பண்டமுந்தி
எட்டுமா காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைச்
சிட்டனா ரடிதொழச் சிவகதி பெறுவது திண்ணமாமே. 

தாழிளங் காவிரி வடகரை யடைகுரங் காடுதுறைப்
போழிள மதிபொதி புரிதரு சடைமுடிப் புண்ணியனைக்
காழியான் அருமறை ஞானசம் பந்தன கருதுபாடல்
கோழையா அழைப்பினுங் கூடுவார் நீடுவா னுலகினூடே.