Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பரங்குன்றம்
இறைவன் பெயர்பரங்கிரிநாதர்
இறைவி பெயர்ஆவுடை நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது மதுரையில் இருந்து சுமார் 8 Km தொலைவில் இக்கோவில் இருக்கிறது. மதுரையில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இக்கோவிலுக்கு அடிக்கடி உள்ளன.

திருப்பரங்குன்றம் ஒரு பாடல் பெற்ற தலமாக இருந்தாலும், இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று என்ற காரணத்தினால் மிகவும் புகழுடன் விளங்குகிறது. மதுரையில் இருந்து மேற்கே சுமார் 8 கி.மி. தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது மலையைக் குடைந்து கட்டப்பட்ட கோவில் இதுவாகும். பல படிக்கட்டுகளை ஏறி கோவிலை அடையலாம். கோவிலில் இறைவன் பரங்கிரிநாதருக்கு அருகில் முருகப்பெருமானின் சந்நிதி இருக்கிறது. ஒருபுறம் சிவபெருமானும் மற்றொரு புறம் திருமாலும் அருகில் விநாயகரும் இருந்து முருகப்பெருமானின் கல்யானத்தை நடத்தி வைக்கின்றனர். கோவில் மண்டபத்துத் தூண் ஒன்றில் தேவேந்திரன் தனது மகள் தெய்வயானையை முருகனுக்குக் கல்யாணம் செய்து கொடுப்பது போன்ற சிற்பம் நம் கருத்தைக் கவரும் வகையில் காட்சி அளிக்கிறது. சங்கத் தமிழ் புலவர் நக்கீரர் முருகப்பெருமான் மீது திருமுருகாற்றுப்படை என்னும் நூலை இயற்றியது இத்தலத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.