பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருமூக்கிச்சரம் (உறையூர்)
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமூக்கிச்சரம் (உறையூர்) |
| இறைவன் பெயர் | பஞ்சவர்ணேஸ்வரர், தான்தோன்றீஸ்வரர் |
| இறைவி பெயர் | காந்திமதி அம்மை, குங்குமவல்லி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | திருச்சி நகரின் ஒரு பகுதியான உறையூரில் கடைவீதி தெருவில் இத்தலம் அமைந்திருக்கிறது. |
காவிரிக் கரையில் இருந்து சுமார் 1 கி.மி. தொலவில், திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதியான உறையூர் என்னும் சிவஸ்தலம் ஒரு மிகப் பழமையான 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட சிவாலயத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. கி.பி. 885-ம் ஆண்டு கல்வெட்டிலிருந்து இக்கோவிலில் பூஜைகள் சிறப்பாக நடைபெற தங்க நாணயங்கள் தானமாக உறையூர் கிராம சபைக்கு கொடுக்கபட்டதை அறியமுடிகிறது. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் ஆலயத்திலுள்ள கல்வெட்டுகளும் இரண்டாம வரகுண பாண்டிய மன்னன் உறையூர் கோவிலுக்கு செய்த தான தருமங்கள் பற்றிய விபரங்களைக் குறிக்கின்றன.
தல வரலாறு: உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னனின் மனைவி காந்திமதி ஒரு சிறந்த சிவபக்தை. தினந்தோறும் திருச்சிராப்பள்ளி மலைக்குச் சென்று தாயுமானவரை வழிபட்டு வந்தாள். அவள் பிள்ளைப்பேறு அடைந்த போதும் தவறாமல் வழிபாடு செய்து வந்தாள். ஒருநாள் உறையூரில் இருந்து சிராப்பள்ளி சென்று கொண்டிருந்தபோது வெய்யில் கொடுமை தாளாமல் வழியில் மயங்கி விழுந்தாள். தனது இறை வழிபாடு தடைபட்டு விட்டதே என்று மிகவும் மனம் வருந்தினாள். காந்திமதியின் மனவருத்தத்தைப் போக்க விரும்பிய இறைவன் அந்த இடத்திலேயே காந்திமதிக்குக் காட்சி தந்தார். இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

யானையின் மதத்தை கோழி அடக்கும் சிற்பம்
மற்றுமொரு தல வரலாறும் இத்தலத்திற்கு உண்டு. சோழ மன்னன் ஒருவன் தன் பட்டத்து யானை மேல் ஏறி உறையூரை வலம் வந்து கொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்ததது. யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர். சிவபெருமான் மீது தீராத பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான். சிவபெருமானும் கருனை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க, அக்கோழியும் அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தடியின் கீழ் நின்றது. கோழியும் அங்கே வந்தமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக் கண்ட மன்னன் உறையூர் தலத்தின் மகிமையை உணர்ந்து தான் வணங்கும் சிவபெருமானுக்கு இத்தலத்தில் ஆலயம் ஒன்று எழுப்பினான். இத்தலமும் கோழியூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. இத்தல வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் மூலவர் கருவறை வெளிச் சுவற்றில் வலதுபுறம் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காண்லாம்.
கோவில் நுழைவு வாயில்
கோவில் அமைப்பு: ஆலயத்தில் நுழைந்தவுடன் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நந்தியைக் காணலாம். கோவிலில் மகாமண்டபம், அர்த்தமண்டபம் கடந்து சென்றால் மூலவர் கருவறை இருக்கிறது. இங்கு சிவபெருமான் உதங்கமுனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களில் காட்டியருளினார். ஆகையால் இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் எனப்படுகிறார். உதங்க முனிவரின் சந்நிதி இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது. கருவறையில் மூலவர் லிங்க உருவில் அகன்ற ஆவுடையார் மீது தான்தோன்றீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி அளிக்கிறார். இறைவி காந்திமதி அம்மை வடக்கு நோக்கி தனி சந்நிதியில் கைகளில் அங்குசமும், தாமரை மலரும் வைத்துக் கொண்டு அருள் புரிகிறாள். இத்திருத்தலத்தில் அமைந்துள்ள காந்திமதியம்மை நாகலோகத்தில நாககன்னியர்களால் பூசிக்கப்பட்டு சோழ மன்னனால் கொண்டு வரப்பட்டு இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது ஐதீகம். இச்சந்நிதிக்கு அருகில் மஹாவிஷ்னு, சூரியன், காலபைரவர் மற்றும் சனீஸ்வரன் அகியோரின் உருவச் சிலைகள் உள்ளன.
அர்த்த மண்டபத்தில் கருவறையின் நுழைவாயிலின் இருபுறமும் சுமார் 6 அடி உயரமுள்ள துவாரபாலகர்களின் சிலைகள் உள்ளன. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்த இரு சிலைகளும் சிறந்த வேலைப்பாடுகளுடன் சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கின்றன. கருவறையின் தென்புற வெளிச் சுவற்றில் தட்சினாமூர்த்தியும், வடபுற வெளிச் சுவற்றில் பிரம்மாவும் காட்சி அளிக்கின்றனர். 4 அடி உயரமுள்ள சண்டிகேஸ்வரரின் உருவச் சிலையும் காணவேண்டிய ஒன்றாகும். உட்பிரகாரத்தின் தென்புறம் மிகப்பெரிய காளி உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜெயகாளி என்று அழைக்கப்படும் இந்தக் காளி மிகவும் சக்தி வாய்ந்தவள். இத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும் இரண்டு திருக்கரங்களும் விளங்க தனது இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார்.
பஞ்சபூத தலங்களாகிய சிதம்பரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் காட்சியளித்து அருள் புரியும் சிவபெருமான் ஐந்து பூதங்களையும் ஒன்றாக்கி உறையும் தலமே திருமூக்கீச்சரம் என்ற உறையூர் திருத்தலம். எனவே பஞ்சபூத தலங்களை தரிசிக்கும் புண்ணியம் இத்தல இறைவனை வழிபட்டாலே கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. மேலும் படைத்தலின் தெய்வமாகிய பிரம்மாவே இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் எவ்வகை தொழிலிலும் வெற்றியடைய இத்தல மூலவராகிய பஞ்சவர்ணேஸ்வரரை வழிபட்டால் நலம் பெறலாம். கார்க்கோடகன் ஆகிய பாம்பும் கருடனும் இத்தலத்தில் வழிபட்டுள்ளதால் எவ்விதத்தில் பெற்றிருக்கும் சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து விமோசனம் கிடைக்கும் தலம் இதுவாகும். மற்றும் காசியப முனிவர் இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். யானை ஏற முடியாதபடி 70 மாடக்கோவில்களைக் கட்டிய கோச்செங்கட் சோழன், 63 நாயன்மார்களில் ஒருவரான புகழ்ச் சோழன் ஆகியோர் பிறந்த தலம் இதுவே.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம்
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர் காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம் ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே. வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக் கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக் கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே. மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால் செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே. அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந் தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான் மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே. விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள் வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன் அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள் வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம் அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே. அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய் உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான் அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே. ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங் கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும் ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல் மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே. நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச் சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான் சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே. வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர் உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான் ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர் பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே. மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச் செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.