வேதபுரீசர் கோவில், திருவேதிகுடி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவேதிகுடி |
| இறைவன் பெயர் | வேதபுரீசர், ஆராவமுது நாதர் |
| இறைவி பெயர் | மங்கையர்க்கரசி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | திருக்கண்டியூர் என்ற பாடல் பெற்ற ஸ்தலத்தில் இருந்து தென்கிழக்கே 4 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருசோற்றுத்துறை என்ற பாடல் பெற்ற ஸ்தலமும் அருகில் இருக்கிறது. |
திருவேதிக்குடி தலம் சப்தஸ்தான தலங்களில் நான்காவதாக போற்றப்படுகிறது. பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை பூஜித்துப் பேறு பெற்றதால் இத்தலம் திருவேதிக்குடி என்று பெயர் பெற்றது. மூன்று நிலைகளோடு கூடிய சிறிய ராஜகோபுரத்தைக் கடந்து கோவிலுக்குள் சென்றால் மகாமண்டபம் வரும். அங்கு நடராஜர் சபை இருக்கிறது. வலமாக வரும் போது 108 சிவலிங்கங்கள் இருப்பதைப் பார்க்கலாம். அம்பாள் மங்கையர்க்கரசி சந்நிதி இரண்டாம் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதியை ஒட்டினாற்போல் வசந்த மண்டபம் இருக்கிறது. கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் மஹாலக்ஷ்மி ஆகியோரை தரிசிக்கலாம். கருவறையில் மூலவர் வேதபுரீஸ்வரர் காட்சி தருகிறார். கோவிலில் சப்தஸ்தான தலலிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாலயத்தில் பங்குனி மாதம் 13, 14, 15 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது. சூரியன் ஈசனை பூஜை செய்வதாக ஐதீகம். இத்தலத்தில் சூரியன், பிரம்மா, குபேரன் ஆகியோர் தவமிருந்து வேதபுரீஸ்வரர் அருள் பெற்றிருக்கின்றனர். இத்தலம் ஒரு திருமண பிரார்த்தனை தலமாக கருதப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்குரிய பதிகத்தில் கன்னியரும், ஆடவரும் விரும்பும் மணம் கைவரப் பெறும் தலம் இது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். இத்தலத்துப் பிள்ளையார் வேதம் கேட்கச் சாய்ந்திருக்கும் நிலையில் காணப்படுகிறார். இவருக்கு வேதப்பிள்ளையார் என்று பெயர்.