சோமேஸ்வரர் கோவில், பழையாறை வடதளி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | பழையாறை வடதளி |
| இறைவன் பெயர் | சோமேஸ்வரர் - பழையாறை தர்மபுரீஸ்வரர் - வடதளி |
| இறைவி பெயர் | லோகாம்பிகை நாயகி - பழையாறை விமலநாயகி - வடதளி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
| எப்படிப் போவது | தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் பழையாறை வடதளி என்ற இந்த இரட்டை சிவஸ்தலம் இருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநந்திபுர விண்ணகரம் என்ற கோவில் பழையாறைக்கு அருகில் உள்ளது. |
வடதளி: பழையாறை வடதளி என்று அழைக்கப்படுமிடம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. ஊர் என்று சொல்லும் அளவிற்கு வீடுகள் அதிகம் இல்லை. சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்றாக கருதப்படும் வடதளி கோவில் மிகவும் சிதிலமான நிலையில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கிவிடுகிறார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை.
பழையாறை: வடதளியில் இருந்து திருமலைராயன் ஆற்றைக் கடந்து சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவில் வந்து அடையலாம். சோழர் காலத்து சிற்பப் பணிக்கு எடுத்துக் காட்டாக இக்கோவில் வாயில் சுவரும், சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலும் வடதளி கோவிலைப் போன்றே மகவும் சிதிலமான நிலையில் இருக்கிறது. கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் வெளிப் பிரகாரத்தில் அம்பாள் லோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குள்ள படிக்கட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கபட்டிருகின்றன. உள் பிரகாரத்தில் நுழைந்தவுடன் முன் மண்டபத்தில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது. அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள துர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
அப்பர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே அலையி னார்பொழி லாறை வடதளி நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக் காக்கி னானணி யாறை வடதளி நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே. குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை அண்ட ரைப்பழை யாறை வடதளிக் கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே. முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் படைய ரைப்பழை யாறை வடதளி உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே. ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங் கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை அள்ள லம்புன லாறை வடதளி வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே. நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ் சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் தீருமே. திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை அருட்டி றத்தணி யாறை வடதளித் தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே. ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை பாத னைப்பழை யாறை வடதளி நாத னைத்தொழ நம்வினை நாசமே. வாயி ருந்தமி ழேபடித் தாளுறா ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் பாயி ரும்புன லாறை வடதளி மேய வன்னென வல்வினை வீடுமே. செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல் எருத்தி றவிர லாலிறை யூன்றிய அருத்த னைப்பழை யாறை வடதளித் திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.