Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சோமேஸ்வரர் கோவில், பழையாறை வடதளி
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | பழையாறை வடதளி |
| இறைவன் பெயர் | சோமேஸ்வரர் - பழையாறை தர்மபுரீஸ்வரர் - வடதளி |
| இறைவி பெயர் | சோமகமலாம்பிகை - பழையாறை விமலநாயகி - வடதளி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 |
| எப்படிப் போவது | தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மி. தொலைவில் பழையாறை வடதளி என்ற இந்த இரட்டை சிவஸ்தலம் இருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநந்திபுர விண்ணகரம் என்ற கோவில் பழையாறைக்கு அருகில் உள்ளது. பட்டீஸ்வரத்தில் இருந்து அருகாமையில் உள்ளது. |
| ஆலய முகவரி | அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் பழையாறை பட்டீஸ்வரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சை மாவட்டம் PIN - 612703 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். அருகில் மெய்காப்பாளர் வீடு இருப்பதால் எந்நேரமும் தரிசிக்கலாம். |
வடதளி: பழையாறை வடதளி என்று அழைக்கப்படுமிடம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து முழையூர் (தேவார வைப்புத் தலம்) வழியாகச் சிறிது தூரத்தில் இருக்கிறது. ஊர் என்று சொல்லும் அளவிற்கு வீடுகள் அதிகம் இல்லை. சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்றாக கருதப்படும் வடதளி கோவில் மிகவும் சிதிலமான நிலையில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கி உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார். இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை.
பழையாறை: பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து ஆவூர் செல்லும் வழியில் திருமலைராயன் ஆற்றுப் பாலம் கடந்து பின் முடிகொண்டான் ஆற்றுப் பாலத்திற்கு சற்று முன்னாலுள்ள தேனாம்படுகை என்ற இடத்தில் இடதுபறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவில் வந்து அடையலாம். சோழர் காலத்து சிற்பப் பணிக்கு எடுத்துக் காட்டாக இக்கோவில் வாயில் சுவரும், சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலும் வடதளி கோவிலைப் போன்றே மிகவும் சிதிலமான நிலையில் இருக்கிறது. முற்றுப் பெறாத முதல் கோபுரத்தின் வழியாக கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் லோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குள்ள படிக்கட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கபட்டிருகின்றன. இரண்டாவது கோபுரம் 3 நிலைகளை உடையது. இதன் வழியே உள்ளே சென்றால் நான் காண்பது முன் மண்டபம். பக்கவாட்டிலுள்ள படிக்கட்டுகள் மூலம் எறிச் சென்று முன் மண்டபம் தாண்டி அர்த்த மண்டபம், அதன்பின கருவறையில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.
அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள வீரதுர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த வீரதுர்க்கையை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் சகல செயகரியங்களும், செயபாக்கியமும் கிடைக்கும் எனபது ஐதீகம். இந்த வீரதுர்க்கை சந்நிதிக்கு அருகில் கடன் தீர்க்கும் கைலாசநாதர் லிங்கம் உள்ளது. இந்த கைலாசநாதரை 11 மாதம் அல்லது 11 வாரம் அல்லது 11 திங்கள், சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை, மனச்சுமை தீரும் என்பது ஐதீகம். மூலவர் கருவறைச் சுற்றில் நால்வர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடனுள்ள முருகர் சந்நிதி மற்றும் நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கோவிலுக்கு வெளியே சோம தீர்த்தம் உள்ளது.
தற்போது இவ்வாலயத்தில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சுவாமிமலை முருகர் ஆலயத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் சோமேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிக்கு உங்களால் முடிந்த உதவியைச் செய்யுங்கள்.
தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் பழையாறை நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி ஆகிய பிரிவுகளாக இருந்த இந்தப் பழையாறையில் நான்கு சிவன் கோவில்களும் இருந்தன. அவற்றில் இன்று வடதளி தர்மபுரீஸ்வரர் கோவிலும், கீழ்த்தளி சோமேஸ்வரர் கோவிலும் மட்டுமே உள்ளன. இவ்வூருக்கு தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடி கொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது. அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.
| பழையாறை சோமேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | |
|---|---|
![]() முற்றுப் பெறாத முதல் கோபுரம் |
![]() நந்தி மண்டபம் மற்றும் பலிபீடம் - பின்புறம் சிதலமடைந்த முதல் கோபுரம் |
![]() 3 நிலை இரண்டாம் கோபுரம் |
![]() அம்பாள் சந்நிதி தனிக் கோவில் |
![]() சிவன் சந்நிதி விமானம் |
![]() இறைவன் சந்நிதி முன் மண்டபம் |
![]() சோமகமலாம்பிகை கோவில் - முன் தோற்றம் |
![]() பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் |
![]() வள்ளி தெய்வானையுடன் முருகர் |
![]() வீரதுர்க்கை |
அப்பர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே அலையி னார்பொழி லாறை வடதளி நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக் காக்கி னானணி யாறை வடதளி நோக்கி னார்க்கில்லை யாலரு நோய்களே. குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை அண்ட ரைப்பழை யாறை வடதளிக் கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே. முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரை கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் படைய ரைப்பழை யாறை வடதளி உடைய ரைக்குளிர்ந் துள்குமென் உள்ளமே. ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணுங் கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை அள்ள லம்புன லாறை வடதளி வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே. நீதி யைக்கெட நின்றம ணேயுணுஞ் சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் தீருமே. திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை அருட்டி றத்தணி யாறை வடதளித் தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே. ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை பாத னைப்பழை யாறை வடதளி நாத னைத்தொழ நம்வினை நாசமே. வாயி ருந்தமி ழேபடித் தாளுறா ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் பாயி ரும்புன லாறை வடதளி மேய வன்னென வல்வினை வீடுமே. செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல் எருத்தி றவிர லாலிறை யூன்றிய அருத்த னைப்பழை யாறை வடதளித் திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.










