துறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவிளநகர் |
| இறைவன் பெயர் | துறைகாட்டும் வள்ளலார், உசிரவனேஸ்வரர் |
| இறைவி பெயர் | வேயுறு தோளியம்மை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. |
சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 5 நிலை ராஜகோபுரம் கொண்டது துறை காட்டும் வள்ளலார் கோவில். இக்கோவில் 2 பிரகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மனடபமும் இருக்கின்றன. 2 வது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார். மூலவர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இறைவி வேயுறுதோளியம்மை தந்து திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆக்யோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவக்கிரஹ சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
சம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம்.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம்
ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர் குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி நளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார் மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே. அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண் டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப் புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய மிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே. வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த் தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர் மீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே. கால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார் நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார் மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே. பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித் துன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச் சென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார் மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே. தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும் யாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார் மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும் மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே. சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார் கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார் மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார் விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே. படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார் அடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார் விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார் மிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே. கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார் பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார் மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார் மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே. உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும் உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும் உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல் உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே. மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய நன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர் இன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த் துன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.