Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வலம்புரிநாதர் கோவில், திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவலம்புரம் (தற்போது மேலப்பெரும்பள்ளம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்வலம்புரநாதர்
இறைவி பெயர்வடுவகிர்க்கண்ணியம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 2
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சென்று மேலையூர் அடைந்து, அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சென்று இத்தலத்தை அடையலாம். சீர்காழியில் இருந்து சுமார் 16 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்தும் பூம்புகார்ச் சாலையில் சென்று காவிரி கடைமுக அணையை அடைந்து, அங்கிருந்து சென்றாலும் இத்தலத்தை அடையலாம். பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி கீழையூர் கிராமத்திற்குள் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரிஅருள்மிகு வலம்புரநாதர் திருக்கோயில்
மேலப்பெரும்பள்ளம்
மேலையூர் அஞ்சல்
தரங்கம்பாடி வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609 107

இவ்வாலயம் தினந்தோறும் காலை 8-30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலச் சிறப்பு: மகாவிஷ்ணு சிவனைக் குறித்து தவம் செய்யப் போன போது, திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டு சென்றார். தவத்தின் பலனாக மகாவிஷ்ணு சிவபெருமானிடமிருந்து சக்ராயுதமும், கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும், பத்மமும் பெற்றார் என் தல வரலாறு கூறுகிறது. காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) திருவலஞ்சுழி தலத்தில் ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. ஹேரண்ட மகரிஷி திருவலஞ்சுழியில் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னை பலி கொடுத்து காவிரியை மீண்டும் வெளிக் கொண்டுவந்த பிறகு வலமாக வந்து இத்தலத்தில் கரையேறினார். அதனால் இத்தலம் "திருவலம்புரம்" ஆனது. ஹேரண்ட மகரிஷிக்கு இத்தலத்தில் தனி கோயில் உள்ளது. சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது, சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார். இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. எனவே லிங்கத்திற்கு சாம்பிராணித்தைலம், புனுகுசட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாற்றப்படுகிறது. இதனால் இத்தலம் "மேலப்பெரும்பள்ளம்" என்று அழைக்கப்படுவதாக்க் கூறுகிறார்கள்.

கோவில் அமைப்பு: மூவராலும் பதிகம் பாடப் பெற்ற தலம் என்ற சிறப்பைப் பெற்ற இத்தலம் ஒரு மாடக் கோவிலாகும். கோவிலுக்கு எதிரில் உள்ள தீர்த்தக்கரையில் விநாயகர் விற்றிருக்கின்றார். அருகே ஏரண்ட முனிவர் உருவமும் அவர் வழிபட்ட இலிங்கமும் உள்ளன. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தில் மூலவர் வலம்புரிநாதர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். உள் பிராகாரத்தில் சூரியன், விநாயகர், நால்வர், விசுவநாதர், முருகர், இராமநாதர், கஜலட்சுமி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி மகாமண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. இங்குள்ள பிட்சாடனர் மூர்த்தம் மிகச் சிறப்பாக உள்ளது. கருவறை சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. நடராசர் சபையும் மகாமண்டபத்தில் உள்ளது. ஆலயத்தின் தீர்த்தங்களாக பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவை உள்ளன. தல விருட்சமாக ஆண்பனை விளங்குகிறது.

திருவலம்புரம் வலம்புரநாதர் ஆலயம் புகைப்படங்கள்

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம்

ஆலயத்தின் தோற்றம் - நந்தி மண்டபம், பலிபீடம்

பட்டினத்து அடிகள் வடிகஞ்சி குடிக்கும் சித்திரம்

தேவார மூவர் சிவனை வழிபடும் சித்திரம்

ஏரண்ட முனிவரும், மன்னனும் சிவனை வழிபடும் சித்திரம்

தல விருட்சம் பனைமரம்