Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
பசுபதீஸ்வரர் கோவில், திருக்கொண்டீச்சரம்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருக்கொண்டீச்சரம் (மக்கள் வழக்கில் திருக்கண்டீஸ்வரம் என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | பசுபதீஸ்வரர் |
| இறைவி பெயர் | சாந்தநாயகி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 2 |
| எப்படிப் போவது | நன்னிலத்தில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் முடிகொன்டான் ஆற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. நாகப்பட்டினம் - நன்னிலம், மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி (வழி நன்னிலம்), நாகப்பட்டினம் - கும்பகோணம் (வழி நன்னிலம்) முதலிய பாதைகளில் வருவோர், நன்னிலம் ஊருக்குள் நுழைவதற்கு முன்னால் "தூத்துகுடி நிறுத்தம்"” என்னுமிடத்தில் பிரியும் பாதையில் உள்ளே சென்றால் வெகு அருகாமையிலுள்ள கோயிலையடையலாம். |
| ஆலய முகவரி |
நிர்வாக அதிகாரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோவில் திருக்கண்டீஸ்வரம் தூத்துக்குடி அஞ்சல் வழி சன்னாநல்லூர் நன்னிலம் R.M.S. திருவாரூர் மாவட்டம் PIN - 609504 இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும். |
![]() Map courtesy by: Yahoo Maps | |

மூலவர் பசுபதீஸ்வரர்
தல வரலாறு: ஒருமுறை சிவபெருமான் உமையம்மைக்கு வேத ரகசியங்களை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதை கருத்தாக கவனிக்காத உமையவளை பசுவாக பிறக்கும்படி சபிக்கிறார் ஈசன். தேவியும் கையிலையில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள். காமதேனுவாக மாறிய அன்னை தனது கூர்மையான கொம்புகளால் பூமியை ஆழத் தோண்டுகிறாள். காமதேனுவாக அன்னை பூமியைத் தோண்டிய போது, பூமியில் லிங்க உருவில் மறைந்திருந்த சுவாமியின் சிரசை கொம்பு இரு பாகமாகக் கிழித்து விட்டது. பாணமாக உள்ள லிங்கத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. காமதேனு வடிவம் கொண்ட அம்பிகை பாலைச் சொரிந்து ஈசனை வழிபட இறைவன் வெளிப்பட்டு அம்பிகைக்கு சபவிமோசனம் அருளுகிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். ஆலய குருக்களிடம் காண்பிக்கச் சொன்னால், சிவலிங்கம் நடுவில் கை வைத்து ஒரு முழம் ஆழத்தைக் காட்டுவார்.
கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. மூன்று புறமும் நீர் நிறைந்த அகழியால் சூழப்பட்ட திருக்கோயில். இந்த அகழியே க்ஷீரதீர்த்தம் எனப்படுகிறது. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேல் பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் கொடிமரத்து விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. அடுத்து 2-ம் வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, சுப்பிரமணியர், கஜலட்சமி சந்நிதிகள் ஆகியவற்றைக் காணலாம். இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிறிய பாணத்துடனுள்ள சிவலிங்கத் திருமேனி ஆழமான வடுப்பட்டு இரண்டாகப் பிளந்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. கருவறை முன் லிங்கவடிவ மூர்த்திக்கு காமதேனு பால் சொரியும் காட்சியைக் காணலாம். கருவறைப் பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகள் உள்ளன. சுவாமி மண்டபத்தில் உள்ள ஒரு தூணில் மூன்று தலைகள், மூன்று கால்களுடன் ஜுரஹரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். அகத்தியர் ஒருமுறை இத்தலத்திற்கு சுவாமியை வழிபடவந்தபோது கடுமையான காய்ச்சலால் அவதியுற்றதாகவும், இறைவன் ஜுரதேவராக வந்து காய்ச்சலைப் போக்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு வெந்நீரில் அபிஷேகம் செய்து, அன்னத்துடன் மிளகுரசம் வைத்து வழிபட்டால் பரிபூரண குணமாகிவிடுகிறது. மற்றொரு தூணில் காமதேனு, அம்பாள் வடிவம் போன்ற சிற்பங்கள் உள்ளன.
வெளவால் நெத்தி மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சாந்தநாயகியின் சந்நிதி அமைந்துள்ளது. இம் மண்டபத்தில் ஆபத் சகாய மகரிஷியின் உருவமும் உள்ளது.
இத்தலத்திற்கு 4-ம் திருமுறையில் ஒரு பதிகமும், 5-ம் திருமுறையில் ஒரு பதிகமும் ஆக திருநாவக்கரசரின் இரண்டு பதிகங்கள் உள்ளன.
| திருக்கொண்டீச்சரம் பசுபதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் | ||
|---|---|---|
![]() ஆலயத்தின் முதல் முகப்பு வாயில் |
![]() 2-ம் வாயில் மேலுள்ள சுதைச் திறபங்கள் |
|
![]() கொடிமரத்து விநாயகர் |
![]() நந்தி |
|
![]() பலிபீடம் |
![]() பசு சிவலிங்கத்தின் மீது பால் சொரியும் சிற்பம் |
|
![]() ஜுரதேவர் |
![]() கோஷ்டத்தில் லிங்கோத்பவர் |
|
![]() சுவாமி சந்நிதி விமானம் |
![]() அம்பாள் சந்நிதி விமானம் |
|
| திருக்கொண்டீச்சரம் பசுபதீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள் தந்து உதவியவர் சேலத்தைச் சார்ந்த திரு விவேக் அவர்கள் | ||











