வீரட்டானேஸ்வரர் கோவில், திருவிற்குடி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவிற்குடி |
| இறைவன் பெயர் | வீரட்டானேஸ்வரர் |
| இறைவி பெயர் | ஏலவார்குழலி, பரிமளாம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | நன்னிலத்திற்கு அருகில் இத்தலம் இருக்கிறது. சிவபெருமானின் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஜலந்திரன் சம்ஹாரம் நடந்த இடம் இதுவே. |
சிவபெருமான் எட்டு வீரச் செயல்கள் நிகழ்த்திய அட்ட வீரட்டத்தலங்களில் திருவிற்குடியும் ஒன்றாகும். பிரம்மனிடம் பல வரங்கள் பெற்ற சலந்தாசுரன் என்பவன் தந்து வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது காற் பெருவிரல்லால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலை மேல் தாங்கி நில் என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்கிறது. சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அஷ்ட வீரட்டானத் தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
இத்தலத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும் நான்கு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்து தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 11 பாடல்களைக் கொண்ட இப்பதிகத்தின் 7-வது பாடல் சிதைந்து போயிற்று.
வடிகொள் மேனியர் வானமா மதியினர் நதியினர் மதுவார்ந்த கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் உடைபுலி யதளார்ப்பர் விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை விற்குடி வீரட்டம் அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை அருவினை யடையாவே. களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் கடிகமழ் சடைக்கேற்றி உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் பொருகரி யுரிபோர்த்து விளங்கு மேனியர் எம்பெரு மானுறை விற்குடி வீரட்டம் வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் வருத்தம தறியாரே. கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி மார்பினர் வலங்கையில் எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் தாடிய வேடத்தர் விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி விற்குடி வீரட்டம் பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் பேணுவ ருலகத்தே. பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் பொலிதர நலமார்ந்த பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு கடலெழு விடமுண்டார் வேத மோதிய நாவுடை யானிடம் விற்குடி வீரட்டஞ் சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோ பிணி தீவினை கெடுமாறே. கடிய ஏற்றினர் கனலன மேனியர் அனலெழ வூர்மூன்றும் இடிய மால்வரை கால்வளைத் தான்றன தடியவர் மேலுள்ள வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை விற்குடி வீரட்டம் படிய தாகவே பரவுமின் பரவினாற் பற்றறும் அருநோயே. பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் கையினர் மெய்யார்ந்த அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர் அரியவர் அல்லார்க்கு விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி விற்குடி வீரட்டம் எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் கிடர்கள்வந் தடையாவே. இப்பதிகத்தின் 7-ம் பாடல் சிதைந்து போயிற்று. இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை யிகலழி தரவூன்று திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு பொருளினன் இருளார்ந்த விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி விற்குடி வீரட்டந் தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் துன்பநோ யடையாவே. செங்கண் மாலொடு நான்முகன் தேடியுந் திருவடி யறியாமை எங்கு மாரெரி யாகிய இறைவனை யறைபுனல் முடியார்ந்த வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் விற்குடி வீரட்டந் தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர் தவமல்கு குணத்தாரே. பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ ராடைய ரவர்வார்த்தை பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் பரிவுறு வீர்கேண்மின் விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் விற்குடி வீரட்டங் கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் கருத்துறுங் குணத்தாரே. விலங்க லேசிலை யிடமென வுடையவன் விற்குடி வீரட்டத் திலங்கு சோதியை எம்பெரு மான்றனை யெழில்திகழ் கழல்பேணி நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் பந்தனற் றமிழ்மாலை வலங்கொ டேயிசை மொழியுமின் மொழிந்தக்கால் மற்றது வரமாமே.