Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

திருபயற்றாட்டீஸ்வரர் கோவில், திருபயற்றூர் (திருபயத்தங்குடி)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருபயற்றூர் (தற்போது திருபயத்தங்குடி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்பயற்றூர்நாதர்
இறைவி பெயர்காவியங்கண்ணி அம்மை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது திருவாரூரிலிருந்து கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து வலப்பக்கம் பிரியும் நாகூர்ச் சாலையில் சென்றால் மேலப்பூதனூர் கிராமம் வரும். அங்கிருந்து திருமருகல் செல்லும் சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
Siyathamangai route mapMap courtesy by: Yahoo Maps

திருநாவுக்கரசர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகம்:

உரித்திட்டார் ஆனை யின்றோள்
உதிரவா றொழுகி யோட
விரித்திட்டார் உமையா ளஞ்சி
விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிது போது
தரிக்கில ராகித் தாமுஞ்
சிரித்திட்டார் எயிறு தோன்றத்
திருப்பயற் றூர னாரே. 

உவந்திட்டங் குமையோர் பாகம்
வைத்தவர் ஊழி யூழி
பவந்திட்ட பரம னார் தாம்
மலைச்சிலை நாகம் ஏற்றிக்
கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்
கனலெரி யாகச் சீறிச்
சிவந்திட்ட கண்ணர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 	

நங்களுக் கருள தென்று
நான்மறை யோது வார்கள்
தங்களுக் கருளும் எங்கள்
தத்துவன் றழலன் றன்னை
எங்களுக் கருள்செய் யென்ன
நின்றவன் நாகம் அஞ்சுந்
திங்களுக் கருளிச் செய்தார்
திருப்பயற் றூர னாரே. 	

பார்த்தனுக் கருளும் வைத்தார்
பாம்பரை யாட வைத்தார்
சாத்தனை மகனா வைத்தார்
சாமுண்டி சாம வேதங்
கூத்தொடும் பாட வைத்தார்
கோளரா மதியம் நல்ல
தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
திருப்பயற் றூர னாரே. 	

மூவகை மூவர் போலும்
முற்றுமா நெற்றிக் கண்ணர்
நாவகை நாவர் போலும்
நான்மறை ஞான மெல்லாம்
ஆவகை யாவர் போலும்
ஆதிரை நாளர் போலுந்
தேவர்கள் தேவர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 

ஞாயிறாய் நமனு மாகி
வருணனாய்ச் சோம னாகித்
தீயறா நிருதி வாயுத்
திப்பிய சாந்த னாகிப்
பேயறாக் காட்டி லாடும்
பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
தீயறாக் கையர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 	

ஆவியாய் அவியு மாகி
அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும்
பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக்
கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார்
திருப்பயற் றூர னாரே. 	

தந்தையாய்த் தாயு மாகித்
தரணியாய்த் தரணி யுள்ளார்க்
கெந்தையு மென்ன நின்ற
ஏழுல குடனு மாகி
எந்தையெம் பிரானே என்றென்
றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
சிந்தையுஞ் சிவமு மாவார்
திருப்பயற் றூர னாரே. 

புலன்களைப் போக நீக்கிப்
புந்தியை யொருங்க வைத்து
இலங்களைப் போக நின்று
இரண்டையும் நீக்கி யொன்றாய்
மலங்களை மாற்ற வள்ளார்
மனத்தினுட் போக மாகிச்
சினங்களைக் களைவர் போலுந்
திருப்பயற் றூர னாரே. 

மூர்த்திதன் மலையின் மீது
போகாதா முனிந்து நோக்கிப்
பார்த்துத்தான் பூமி மேலாற்
பாய்ந்துடன் மலையைப் பற்றி
ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
அடர்த்துநல் லரிவை யஞ்சத்
தேத்தெத்தா என்னக் கேட்டார்
திருப்பயற் றூர னாரே.