மாணிக்கவண்னர் (இரத்தினகிரீஸ்வரர்) கோவில், திருமருகல்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமருகல் |
| இறைவன் பெயர் | மாணிக்கவண்னர், இரத்தினகிரீஸ்வரர் |
| இறைவி பெயர் | வண்டுவார் குழலம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 2 (இவற்றுள் ஒரு பதிகம் திருமருகல், திருசெங்கட்டாங்குடி இரண்டு சிவஸ்தலத்திற்கும் பொதுவானது) |
| எப்படிப் போவது | நன்னிலத்தில் இருந்து 12 கி.மி. தொலைவில் நாகூர் செல்லும் சாலை வழியில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலை வழியாகவும் திருமருகல் தலத்தை அடையலாம். திருமருகலில் இருந்து அருகில் உள்ள திருசாத்தமங்கை, திருசெங்காட்டங்குடி, திருப்புகலூர் ஆகிய மற்ற சிவஸ்தலங்களையும் தரிசிக்கலாம். |
![]() Map courtesy by: Yahoo Maps | |
கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். கிழக்கு திசையிலுள்ள 68 அடி உயரமான கோபுரமே பிரதான நுழை வாயிலாகும். தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. 4 புறமும் மதில்களை உடைய இக்கோவிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பிரகாரத்தில் கொடிமர மண்டபத்தின் மேற்கே அம்பாள் சந்நிதி அமைந்திருக்கிறது. மூலவர் மாணிக்கவண்ணர் சந்நிதி ஒரு கட்டுமலை மேல் அமைந்திருக்கிறது. இத்தலத்தின் ஸ்தல விருட்சம் மருகு (வாழை). அதனால் ஸ்தலவிருட்சத்தின் பெயரால் இத்தலம் திருமருகல் என்று வழங்குகிறது.
விஷம் நீக்கிய வரலாறு: சம்பந்தர் இத்தலத்திற்கு விஜயம் செய்த போது ஆலயத்தின் அருகே ஒரு இளம் பெண் அழுதுகொண்டிருப்பதையும் அவளருகே ஒருவன் இறந்து கிடப்பதையும் பார்க்கிறார்.அடியார்களிடம் காரணம் அறிந்து வரச் சொல்கிறார். அந்த பெண்ணும் அவளுடன் வந்த வனிகனும் வீட்டில் பெரியவர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்து கொள்ள நிச்சயித்தனர் என்றும் இக்கோவிலுக்கு வந்து மணம் புரிந்து கோள்ள வேண்டி முன்தினம் இரவு கோவிலின் அருகே ஒரு மடத்தில் தங்கியதாகவும், இரவு தூங்கும்போது பாம்பு தீண்டி இறந்து விட்டதாகவும் தகவல் கூறினர். திருமணம் ஆகாததால் வனிகனின் உடலைத் தீண்டமாட்டாளாய் அந்தப் பெண் அழுது புலம்பினாள். இறைவன் மேல் தீராத பக்தி கொண்ட அந்தப் பெண் இறைவனை மனமுருகி வேண்டி புலம்புகிறாள் என்று அடியார்கள் சம்பந்தரிடம் தெரிவித்தனர். இளம் பெண்ணின் அழுகைக் குரலையும் அவளின் நிராதரவான நிலையையும் கண்டு இரக்கப்பட்ட திருஞானசம்பந்தர் இறைவன் மேல்
சடையாயெனுமால் சரண்நீ எனுமால் விடையா யெனுமால்வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவளுண் மெலிவே
என்று தொடங்கும் பதிகம் பாட சுற்றிலும் உள்ளோர் அதிசயிக்கும்படி வனிகன் உயிர்பெற்று எழுந்தான். பிறகு அந்த பெண்ணிற்கும் வணிகனுக்கும் இறைவன் முன்னிலையில் சம்பந்தர் மணம் நடத்தி வாழ்த்தி அருளினார். திருமணம் ஆகி ஏதேனும் காரணங்களால் பிரிந்து வாழும் தம்பதியினர் இத்தலத்து இறைவனிடம் வேண்டிக் கொண்டு வழிபட்டால் பிரிந்தர் கூடி வாழ்வர் என்பது நிச்சயம். திருமாலை விட்டுப் பிரிந்த மஹாலக்ஷ்மியும் இத்தலத்திற்கு வந்து சிவனை வழிபாடு செய்து மீண்டும் திருமாலுடன் இணைந்து வாழ அருள் பெற்றாள் என்று தலபுராணம் கூறுகிறது.