வெண்ணைப் பெருமான் கோவில், சிக்கல்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | சிக்கல் |
| இறைவன் பெயர் | வெண்ணைப் பெருமான், நவநீத நாதர் |
| இறைவி பெயர் | வேல் நெடுங்கண்ணி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் சிக்கல் தலம் உள்ளது. |
புராண வரலாறு: புராணகாலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிஷ்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு இத்தலத்திற்கு வந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷிரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார்.பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது.
கோவிலின் சிறப்பு:
கோவிலின் அமைப்பு: கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. அதன் வழியாக் உள்ளே நுழைந்தவுடன் கார்த்திக மண்டபம் இருக்கிறது. அடுத்த வாசலில் தெற்கே விநாயகரும், வடக்கே தண்டபானியும் காட்சி தருகின்றனர். இரண்டவது சுற்றில் சனீஸ்வரர், தட்சினாமூர்த்தி, திருமகள், துர்க்கை, சண்டீசர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோவிலின் மையத்தில் உயரமான படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலயின் கீழ்பக்கம் இறைவி வேல் நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகார சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி, பூமாதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். வடமேற்கு மூலையில் ஆஞ்சனேயர் சந்நிதி அமைந்திருக்கிறது.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
வானுலா வுமதி வந்துல வும்மதின் மாளிகை தேனுலா வுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள் வேனல்வே ளைவிழித் திட்டவெண் ணெய்ப்பெரு மானடி ஞானமா கநினை வார்வினை யாயின நையுமே. மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள் மாமறை யோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப்பெரு மானடி மேவியே அடைந்து வாழுமடி யாரவர் அல்லல் அறுப்பரே. நீல நெய்தல்நில விம்மல ருஞ்சுனை நீடிய சேலு மாலுங்கழ னிவ்வள மல்கிய சிக்கலுள் வேலொண் கண்ணியி னாளையொர் பாகன்வெண் ணெய்ப்பிரான் பால வண்ணன்கழ லேத்தநம் பாவம்ப றையுமே. கந்தமுந் தக்கைதை பூத்துக்க மழ்ந்துசே ரும்பொழிற் செந்துவண் டின்னிசை பாடல்மல் குந்திகழ் சிக்கலுள் வெந்தவெண் ணீற்றண்ணல் வெண்ணெய்ப்பி ரான்விரை யார்கழல் சிந்தைசெய் வார்வினை யாயின தேய்வது திண்ணமே. மங்குல்தங் கும்மறை யோர்கள்மா டத்தய லேமிகு தெங்குதுங் கப்பொழிற் செல்வமல் குந்திகழ் சிக்கலுள் வெங்கண்வெள் ளேறுடை வெண்ணெய்ப்பி ரானடி மேவவே தங்கு மேற்சர தந்திரு நாளுந்த கையுமே. வண்டிரைத் தும்மது விம்மிய மாமலர்ப் பொய்கைசூழ் தெண்டிரைக் கொள்புனல் வந்தொழுகும் வயற் சிக்கலுள் விண்டிரைத் தம்மல ராற்றிகழ் வெண்ணெய்ப்பி ரானடி கண்டிரைத் தும்மன மேமதி யாய்கதி யாகவே. முன்னுமா டம்மதில் மூன்றுட னேயெரி யாய்விழத் துன்னுவார் வெங்கணை யொன்று செலுத்திய சோதியான் செந்நெலா ரும்வயற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உன்னிநீ டம்மன மேநினை யாய்வினை ஓயவே. தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை பற்றி னான்முடி பத்தொடு தோள்கள் நெரியவே செற்ற தேவன்நஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி உற்று நீநினை வாய்வினை யாயின ஓயவே. மாலி னோடரு மாமறை வல்ல முனிவனுங் கோலி னார்குறு கச்சிவன் சேவடி கோலியுஞ் சீலந் தாமறி யார்திகழ் சிக்கல்வெண் ணெய்ப்பிரான் பாலும் பன்மலர் தூவப் பறையும்நம் பாவமே. பட்டை நற்றுவ ராடையி னாரொடும் பாங்கிலாக் கட்ட மண்கழுக் கள்சொல்லி னைக்கரு தாதுநீர் சிட்டன் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மான்செழு மாமறைப் பட்டன் சேவடி யேபணி மின்பிணி போகவே. கந்த மார்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்நல் செந்தண் பூம்பொழிற் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடிச் சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை வெந்த நீறணி யும்பெரு மானடி மேவரே.