மந்திர புரீசுவரர் கோவில், திருவுசத்தானம்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவுசத்தானம் (கோயிலூர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | மந்திர புரீசுவரர் |
| இறைவி பெயர் | பெரியநாயகி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | திருத்துறைப்பூண்டி - காரைக்குடி ரயில் மார்க்கத்தில் உள்ள முத்துபேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே 4 கி.மி.தொலைவில் இத்தலம் இருக்கிறது. முத்துபேட்டையிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலை வழியில் 2 கி.மி. தொலைவில் உள்ளது. தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய பல ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை செல்ல பேருந்து வசதிகள் உண்டு. |
திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய பதிகத்தில் உள்ள 11 பாடல்களில் 5-ம், 6-ம் பாடல்கள் சிதைந்து போயின. மீதியுள்ள 9 பாடல்கள் கீழே.
நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான் பேருடைச் சுக்கிரீ வன்னநு மன்றொழக் காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம் சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன் பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார் முல்லையார் புறவணி முதுபதி நறைகமழ் தில்லையான் உறைவிடந் திருவுசாத் தானமே. தாமலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார் தங்கனா வாக்கினான் ஒருநொடிக் காமனா ருடல்கெடக் காய்ந்தஎங் கண்ணுதல் சேமமா உறைவிடந் திருவுசாத் தானமே. மறிதரு கரத்தினான் மால்விடை யேறியான் குறிதரு கோலநற் குணத்தினார் அடிதொழ நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய் செறிதரு பொழிலணி திருவுசாத் தானமே. இப்பதிகத்தில் 5-ம், 6-ம் பாடல்கள் மறைந்து போயின. பண்டிரைத் தயனுமா லும்பல பத்தர்கள் தொண்டிரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொலக் கொண்டிரைக் கொடியொடுங் குருகினின் நல்லினந் தெண்டிரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே. மடவரல் பங்கினன் மலைதனை மதியாது சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர அடர்தர ஊன்றியங் கேயவற் கருள்செய்தான் திடமென வுறைவிடந் திருவுசாத் தானமே. ஆணலார் பெண்ணலார் அயனொடு மாலுக்குங் காணொணா வண்ணத்தான் கருதுவார் மனத்துளான் பேணுவார் பிணியொடும் பிறப்பறுப் பானிடஞ் சேணுலா மாளிகைத் திருவுசாத் தானமே. கானமார் வாழ்க்கையான் காரமண் தேரர்சொல் ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய் யவெனில் வானமார் மதிலணி மாளிகை வளர்பொழில் தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே. வரைதிரிந் திழியுநீர் வளவயற் புகலிமன் திரைதிரிந் தெறிகடல் திருவுசாத் தானரை உரைதெரிந் துணருஞ்சம் பந்தனொண் தமிழ்வல்லார் நரைதிரை யின்றியே நன்னெறி சேர்வரே.