Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

வேதபுரீஸ்வரர் கோவில், திருவேற்காடு

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவேற்காடு
இறைவன் பெயர்வேதபுரீஸ்வரர், வேற்காட்டீசர்
இறைவி பெயர்பாலாம்பிகை, வேற்கண்ணி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சென்னை - பூவிருந்தமல்லி பிரதான சாலையில் சுமார் 17 கி.மி. பயணம் செய்து, பிறகு வலது புறம் பிரியும் ஒரு கிளைச்சாலை வழியாக சுமார் 3 கி.மி. சென்றால் இந்த சிவஸ்தலத்தை அடையலாம். சென்னை நகரின் பல பகுதிகளிலிருந்தும் திருவேற்காடு செல்வதற்கு பேருந்து வசதிகள் உள்ளன. திருவேற்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவேற்காடு அஞ்சல்
திருவள்ளூர் மாவட்டம்
PIN - 600077

கோவில் விபரம்: திருவேற்காடு என்றதும் அநேகருக்கு அங்குள்ள தேவி கருமாரி அம்மன் ஆலயம் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே திருவேற்காட்டில் பாடல் பெற்ற சிவஸ்தலமான வேதபுரீசுவரர் ஆலயம் இருப்பது பலருக்கு தெரிந்திருக்காது. தேவி கருமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சுமார் 1/2 கி.மி தொலவில் உள்ள சிவாலயத்திற்குச் செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று இறைவனை இஙகு வழிபட்டதால் இத்தலம் வேற்காடு என்று பெயர் பெற்றது. ஆலய முகப்பு கோபுரம் ஐந்து நிலைகளை உடையதாகும். மூலவர் வேதபுரீஸ்வரர் லிங்க உருவில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். லிங்க உருவின் பின்புறம் சுவற்றில் சிவன் பார்வதி திருமணக் காட்சி புடைப்பு சிற்பமாக காணபாடுகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோல காட்சி கொடுத்த தலங்களில் திருவேற்காடும் ஒன்று. ஆலய உட்பிரகாரத்தின் இடது புறம் அகத்தியர் மற்றும் சூரியன் திருமேனிகள் காட்சி தருகின்றன. வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய இறைவி பாலாம்பிகை சந்நிதி காணலாம். மேலும் உட்பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், கணபதி, தட்சினாமூர்த்தி, பிரம்மா மற்றும் துர்க்கை சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி இருக்கிறது. ஆலய கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வலதுபுறத்தில் இந்த சனீஸ்வரன் சந்நிதி உள்ளது. இத்தலத்திலுள்ள முருகன் தன் கையில் வேல் இல்லாமல் வில்லும் அம்பும் ஏந்தியவாறு ஒரு காலை மயிலின் மீது வைத்துக்கொண்டு நின்றபடி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வெள் வேல மரம்.

புராணச் செய்தி: இத்தலம் முருகப் பெருமானின் வாழ்க்கையோடு சம்பந்தம் உடையதாகும். பிரணவத்திற்கு பொருள் கூற முடியாத பிரம்மாவை முருகப் பெருமான் கைது செய்துவிட்டார். அதனால் படைப்புத் தொழில் தடைபட்டது. சிவபெருமான் நந்தியை முருகனிடம் அனுப்பி பிரம்மாவை விடுதலை செய்யும்படி கூறச் செய்தார். ஆனால் முருகன் அதற்கு சம்மதிக்கவில்லை. இதைத் தெரிந்து கொண்ட சிவபெருமான் தானே நேரில் வந்து முருகனிடம் பிரம்மாவின் படைப்புத் தொழில் தடைபடுவதால் ஏற்படும் சிக்கல்களை விளக்கி பிரம்மாவை சிறையிலிருந்து விடுதலை செய்தார். நந்தி மூலம் சொல்லி அனுப்பியும் தன் சொல்லிறகு கட்டுப் படாத முருகனை தண்டிக்கும் பொருட்டு திருவேற்காட்டிற்குச் சென்று அங்கு தன்னை வழிபட்டு வரும்படி ஆணையிட்டார். அதன்படி முருகனும் திருவேற்காடு வந்து ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி சிவனை வழிபட்டார். முருகன் ஏற்படுத்திய தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் உள்ளே இருக்கிறது. இத்தலத்திலுள்ள முருகப்பெருமான் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன.

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் ஆலய புகைப்படங்கள்


temple gopuram temple gopuram another view temple gopuram view from inside tiruvekadu temple

சம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே.
 
ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே. 
 
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேதம் எய்துத லில்லையே.

ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வு டைமனத் தாற்பணிந் தேத்திட
பாழ்ப டும்மவர் பாவமே. 

காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே.

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே. 

மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னானுறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. 

மூரல் வெண்மதி சூடு முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடு நினைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே. 

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னானுறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை யடரப் பட்டானிறை
நெருக்கி னானை நினைமினே. 

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாயெழில்
கூறி னார்க்கில்லை குற்றமே.
 
விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.
சென்னை நகரிலும் அதன் அருகிலும் உள்ள மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
திருவொற்றியூர் திருவலிதாயம் திருமுல்லைவாயில்
திருமயிலை திருவான்மியூர்