தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள் பற்றிக் கூறும் இணையதளம்

Main menu


இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் (6-70-5, 6-71-4) கூறப்பட்டுள்ள கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், எழுமூர், ஏழூர், ஏமகூடம், பேராவூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், ஊற்றத்தூர், அளப்பூர், துறையூர், துவையூர், துடையூர் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தோழூர் (இன்றைய நாளில் தோளூர் என்று அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்சோளீசுவரர்
இறைவி பெயர்விசாலாட்சி.
பதிகம்அப்பர் (6-70-5, 6-71-4)
எப்படிப் போவது நாமக்கல் - மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ-ல் தோளூர் உள்ளது. நாமக்கல்லிலிருந்து 12B, 22, 22A எண்ணுள்ள நகரப் பேருந்துகள் இவ்வூர் வழியாக செல்கின்றன. நாமக்கல்லிலிருந்து தெற்கே சுமார் 10 கி. மீ. தொலைவு.
ஆலய முகவரி அருள்மிகு சோளீசுவரர் திருக்கோவில்
தோளூர்
தோளூர் அஞ்சல்
வழி பாலப்பட்டி
நாமக்கல் மாவட்டம்
PIN - 637017

இவ்வாலயத்தில் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. கோவில் மெய்க்காவலர் வீடு அருகிலுள்ளது. தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
தோழூர் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்

திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 5-வது பாடலிலும், 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 4-வது பாடலிலும் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.


கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர்	6-70-5
கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும்
நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர்
எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னினுள்ளும்
கயிலாய நாதனையே காணலாமே.

பொழிப்புரை :		www.thevaaram.org

கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, 
நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், 
எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங்கோயில் 
ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் .

பிறையூருஞ் சடைமுடி எம் பெருமான் ஆரூர்	6-71-4
பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும்
நாலூரும் சேற்றூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும்
அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர் தானுந்
துடையூரும் தொழ இடர்கள் தொடராவன்றே.

பொழிப்புரை :		www.thevaaram.org

பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர் , பெரும்பற்றப்புலியூர், பேராவூர், 
நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், 
ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், 
துடையூர் என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா

முற்கால சோழ மன்னர்களில் ஒருவரான கரிகாலச் சோழனால் கி.பி. 700-ம் ஆண்டில் இவ்வாலயம் கட்டப்பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூவராலும் திருப்பணி செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கருங்கல் கற்றளியான இக்கோவிலில் மூலவர் சுயம்பு லிங்கமாக சோளீசுவரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார்.

நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தோழூர் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
Map courtesy by: Google Maps