இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடல்களில் கூறப்பட்டுள்ள பொய்கைநல்லூரும் ஒரு தேவார வைப்புத் தலமாகும்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | புலிவலம் |
| இறைவன் பெயர் | தட்சிணகோகர்ணேஸ்வரர் |
| இறைவி பெயர் | ஆனந்தவல்லி |
| பதிகம் | அப்பர் (6-51-11, 6-70-11) |
| எப்படிப் போவது | திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் திருவாரூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் புலிவலம் உள்ளது.. |
| ஆலய முகவரி | அருள்மிகு தட்சிணகோகர்ணேஸ்வரர் திருக்கோவில் புலிவலம் திருவாரூர் வட்டம் ரிருவாரூர் மாவட்டம் PIN - 610109 இவ்வாலயம் தினந்தோறும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர் வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி நிலமலி நெய்த்தானத்தோ டெத் தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர் கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற கயிலாய நாதனையே காணலாமே. பொழிப்புரை : புலிவலம், புத்தூர், புகலூர், புன்கூர், புறம்பயம், பூவணம், பொய்கைநல்லூர், வலிவலம், மாற்பேறு, வாய்மூர், வைகல், வலஞ்சுழி, வாஞ்சியம், மருகல், வன்னி, வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால், தொண்டர்களே ! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களில் எல்லாம் காணலாம்
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 51-வது பதிகத்தில் 11-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகம் திருவீழீமிழலை தலத்திற்குரிய பதிகமாகும்
புன்கூரார் புறம்பயத்தார் புத்தூருள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க தன்கூர்மை கருதிவரை யெடுக்கல் உற்றான் தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும் பொன்கூருங் கழலடியோர் விரலால் ஊன்றிப் பொருப்பதன்கீழ் நெரித்தருள் செய் புவனநாதர் மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே. பொழிப்புரை : ஒளிவீசும் சடைமுடி உடையவராய், காளையை வாகனமாக உடையவராய், வலிமை மிக்க தன் ஆற்றலை நினைத்துக் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட இராவணனுடைய மலைகளை ஒத்த தலைகளையும் தோள்களையும் தாள்களையும் பொற்கழலணிந்த தம் திருவடியின் ஒரு விரலை ஊன்றி மலையின் கீழ் நொறுங்குமாறு செய்து பின் அவனுக்கு அருள் செய்த உலக நாயகர், புன்கூர், புறம்பயம், புத்தூர், பூவணம், புலிவலம் இவற்றில் தங்கி வீழிமிழலையை விருப்புற்று வந்தடைந்தார்
இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.
📌சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதர் என்பவரும் வசித்தனர். இவர்கள் சிவனுக்கு தினமும் மலர் மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். ஆனால், பல சமயங்களில் நல்ல மலர்கள் கிடைக்காது. அழுகல் மலர்கள் கலந்து விடும். மரத்தின் உச்சியிலுள்ள நல்ல மலர்களை பறிக்க வியாக்ரபாதருக்கு முடியாத சூழல் இருந்தது. அவர் மன வருத்தத்தில் இருந்தார். பக்தனின் வருத்தம் போக்க சிவன் அவர் முன் தோன்றினார்.””பக்தனே! உன் வருத்தத்தின் காரணத்தைச் சொல்,” என்றார் தெரியாதவர் போல. வியாக்ரபாதர் சிவனிடம், “”தங்களுக்கு பூஜை செய்ய சிறந்த மலர்கள் கிடைப்பதில்லை. அதிகாலையில் நடை திறக்கும் முன் மாலை தொடுத்தாக வேண்டும். இருளில் நல்ல மலர்கள் தெரிவதில்லை. அதற்குரிய வசதியைச் செய்து தர வேண்டும்,” என்றார். சிவன் அவருக்கு புலிக்கால்களைக் கொடுத்தார். அந்த நகங்களால் மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு ஏறி சிறந்த மலர்களைப் பறித்து வழிபட்டார் வியாக்ரபாதர். இவர் புலிவடிவில் தரிசித்த தலமே திருப்புலிவனம். சுவாமியும் தன் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு “வியாக்ரபுரீஸ்வரர்’ ஆனார்.
இங்கு சிவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின்மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது. உத்ராயணம், தட்சிணாயணம் இரண்டு புண்ணிய காலங்களிலும் இங்குள்ள சூரியன் சிலையின் நிழல், சாயாமல் நேராகவே சுவரில் விழுவது ஒரு தெய்வீக அதிசயம். இத்தல கல்வெட்டுக்களில், இவ்வூரை புலிவலம் என்றும், இறைவன் திருப்புலிவல முடையார், ஆளுடையார் திருப்புலிவல முடையார், திருப்புலிவலமுடைய நாயனார் என்றும் குறிக்கப்படுகிறார். தமிழ் நாடு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்க்கு வடதிசையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.