இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள உஞ்சேனை மாகாளம், உருத்திரகோடி, பொதியின்மலை, தஞ்சை, வழுவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், பஞ்சாக்கை ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
பசுபதி ஈஸ்வரர்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | மாதானம் |
| இறைவன் பெயர் | பசுபதி ஈஸ்வரர் |
| இறைவி பெயர் | பெரியநாயகி |
| பதிகம் | அப்பர் (6-97-10) |
| எப்படிப் போவது | சீர்காழியில் இருந்து தென்திருமுல்லைவாயில் செல்லும் சாலையில் 5 கி.மி. தொலைவில் மாதானம் ஊர் உள்ளது. தென்திருமுல்லைவாயில் செல்லும் பேருந்துகள் மாதானம் வழியாகச் செல்லும். |
| ஆலய முகவரி | அருள்மிகு பசுபதி ஈஸ்வரர் திருக்கோவில் மாதானம் சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் PIN - 631502 |
திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 70-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இந்தப் பதிகம் அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த பொது அருளிச் செய்ததாகும்
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும் வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகாவூர் வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணலாமே. பொழிப்புரை : உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திரகோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தேர்த்திருவிழா நடந்த போது, ஊர் மக்கள் யாவரும் தேரோடு மண்ணில் புதைந்து விட்டதாகவும், பின்பு நாளாவட்டத்தில் கோவிலும் சிதிலமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது பசுபதி ஈஸ்வரர் லிங்கத் திருமேனியும், பெரியநாயகி அம்பாளும் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
மாதானம் ஒரு திருப்புகழ் தலமாகவும் இருந்திருக்கிறது. அருணகிரிநாதரால் போற்றப்பட்ட முருகப் பெருமான் சந்நிதியும் காலப்போக்கில் மறைந்து விட்டது.