வஜ்ரஸ்தம்பநாதர் கோவில், திருமழப்பாடி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமழப்பாடி (பெரம்பாலூர் மாவட்டம்) |
| இறைவன் பெயர் | வஜ்ரஸ்தம்பநாதர், வச்சிரதம்பேஸ்வரர் |
| இறைவி பெயர் | அழகம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 3 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | இந்த சிவஸ்தலம் திருவையாற்றில் இருந்து 13 கி.மி. தொலைவில் இருக்கிறது. அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு வச்சிரதம்பேஸ்வரர் திருக்கோவில் திருமழப்பாடி அஞ்சல் அரியலூர் வட்டம் பெரம்பாலூர் மாவட்டம் PIN - 621851 |
சுந்தரரை குரல் கொடுத்து அழைத்துத் தன் மேல் பாடல் பாட வைத்த சிவபெருமான் வீற்றிருக்கும் சிவஸ்தலம் மழபாடி. சுந்தரர் சோழ நாட்டு சிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து செல்லும்படி நேர்ந்தது. அப்போது "சுந்தரா, என்னை மறந்தாயோ" என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர் அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழப்பாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து வஜ்ரஸ்தம்பநாதர் மேல் பதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம் இதோ!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே. கீளார் கோவணமுந் திருநீறுமெய் பூசியுன்றன் தாளே வந்தடைந்தேன் தலைவாயெனை ஏன்றுகொள்நீ வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே கேளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. எம்மான் எம்மனையென் றெனக்கெட்டனைச் சார்வாகார் இம்மா யப்பிறவி பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன் மைம்மாம் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அம்மான் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. பண்டே நின்னடியேன் அடியாரடி யார்கட்கெல்லாந் தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமைத் துரிசறுத்தேன் வண்டார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்டா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. கண்ணாய் ஏழுலகுங் கருத்தாய அருத்தமுமாய்ப் பண்ணார் இன்றமிழாய்ப் பரமாய பரஞ்சுடரே மண்ணார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே அண்ணா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. நாளார் வந்தணுகி நலியாமுனம் நின்றனக்கே ஆளா வந்தடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள்நீ மாளா நாளருளும் மழபாடியுள் மாணிக்கமே ஆளா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. சந்தா ருங்குழையாய் சடைமேற்பிறை தாங்கிநல்ல வெந்தார் வெண்பொடியாய் விடையேறிய வித்தகனே மைந்தார் சோலைகள்சூழ் மழபாடியுள் மாணிக்கமே எந்தாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. வெய்ய விரிசுடரோன் மிகுதேவர் கணங்களெல்லாஞ் செய்ய மலர்களிட மிகுசெம்மையுள் நின்றவனே மையார் பூம்பொழில்சூழ் மழபாடியுள் மாணிக்கமே ஐயா நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றிசெய்யுங் குறியே நீர்மையனே கொடியேரிடை யாள்தலைவா மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே. ஏரார் முப்புரமும் எரியச்சிலை தொட்டவனை வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனைச் சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்ததமிழ் பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.