Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

நீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலக்குடி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநீலக்குடி
இறைவன் பெயர்நீலகண்டேஸ்வரர், நல்லநாயகேஸ்வரர்
இறைவி பெயர்உமையம்மை, அழகாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 16 கி.மி. தொலைவிலும், மயிலாடுதுறையில் இருந்து 24 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 4 கி.மி. தொலைவில் இருக்கிறது.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர் 
செத்த போது செறியார் பிரிவதே 
நித்த நீலக் குடியர னைந்நினை 
சித்த மாகிற் சிவகதி சேர்திரே. 

செய்ய மேனியன் றேனொடு பால்தயிர் 
நெய்ய தாடிய நீலக் குடியரன் 
மைய லாய்மற வாமனத் தார்க்கெலாங் 
கையி லாமல கக்கனி யொக்குமே.  

ஆற்ற நீள்சடை ஆயிழை யாளொரு 
கூற்றன் மேனியிற் கோலம தாகிய 
நீற்றன் நீலக் குடியுடை யானடி 
போற்றி னாரிடர் போக்கும் புனிதனே. 

நாலு வேதியர்க் கின்னருள் நன்னிழல் 
ஆலன் ஆலநஞ் சுண்டகண் டத்தமர் 
நீலன் நீலக் குடியுறை நின்மலன் 
கால னாருயிர் போக்கிய காலனே.  

நேச நீலக் குடியர னேயெனா 
நீச ராய்நெடு மால்செய்த மாயத்தால் 
ஈச னோர்சர மெய்ய எரிந்துபோய் 
நாச மானார் திரிபுர நாதரே.  

கொன்றை சூடியைக் குன்ற மகளொடு 
நின்ற நீலக் குடியர னேயெனீர் 
என்றும் வாழ்வுகந் தேயிறு மாக்குநீர் 
பொன்றும் போது நுமக்கறி வொண்ணுமே. 

கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர் 
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் 
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் 
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே. 

அழகி யோமிளை யோமெனு மாசையால் 
ஒழுகி ஆவி உடல்விடு முன்னமே 
நிழல தார்பொழில் நீலக் குடியரன் 
கழல்கொள் சேவடி கைதொழு துய்ம்மினே.  

கற்றைச் செஞ்சடைக் காய்கதிர் வெண்டிங்கள் 
பற்றிப் பாம்புடன் வைத்த பராபரன் 
நெற்றிக் கண்ணுடை நீலக் குடியரன் 
சுற்றித் தேவர் தொழுங்கழற் சோதியே. 

தருக்கி வெற்பது தாங்கிய வீங்குதோள் 
அரக்க னாருட லாங்கோர் விரலினால் 
நெரித்து நீலக் குடியரன் பின்னையும் 
இரக்க மாயருள் செய்தனன் என்பரே.