Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

காயாரோகனேசுவரர் கோவில், நாகைக் காரோணம் (நாகப்பட்டிணம்)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்நாகைக் காரோணம் (நாகப்பட்டிணம்)
இறைவன் பெயர்காயாரோகனேசுவரர், ஆதிபுரானேஸ்வரர்
இறைவி பெயர்நீலாயதாட்சி, கருந்தடங்கன்னி
பதிகம்திருநாவுக்கரசர் - 4
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது நாகப்பட்டினம் நகரில் இத்தலம் அமைந்துள்ளது. காயாரோகனேசுவரர் ஆலயத்தில் இருந்து அருகிலேயே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நாகை சௌரிராஜப் பெருமாள் ஆலயம் இருக்கிறது.

இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள தியாகராஜருக்கு சுந்தரவிடங்கர் என்று பெயர். அவர் ஆடும் நடனம் பாராவாரசுரங்க நடனம். இரண்டு பிரகாரங்களுடன் கூடிய மிகப் பெரிய கோவில். இறைவன் அளித்த அதே உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்த புண்டரீக முனிவரின் பக்தியில் உள்ளம் உருகி முனிவரை அதே உடலோடு (காயம்) ஆரோகணம் செய்து முக்தி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் காயாரோகனேசுவரர் என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள் செய்கிறார். இவ்வாலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடையது. இத்தலத்தில் கோவில் கொண்டுள்ள அம்பாள் திருநாமம் நீலாயதாட்சி என்பதாகும்.இவ்வாலயம் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், காசி, மதுரை, திருவாரூர், காஞ்சீபுரம், நாகப்பட்டினம் ஆகிய ஐந்து ஆட்சி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. அம்பாள் நீலாயதாட்சி இங்கு கருந்தடங்கண்ணி என்ற பெயரில் கன்னிப் பெண்ணாகக் காட்சி அளிக்கிறாள். ஆகையால் சுவாமிக்குப் பக்கத்தில் அமையாது தனியாகக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். அம்பாள் கோபுரம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிக்கு எதிரில் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக் காட்டாக நந்தி ஆகியவை கண்டு களிக்க வேண்டியவையாகும். சுற்றுச் சுவர்களில் புண்டரீக முனிவர் இங்கு இறைவனைப் பூஜித்து முக்தி அடைந்த கதை வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. மேலும் நாகாபரணப் பிள்ளையார், சுவாமி சந்நிதியின் முன் உள்ள மிகப் பெரிய சுதை நந்தி, ஒரே கல்லில் செய்யப்பட்ட ஆறுமுகக் கடவுள் பஞ்சமுக விநாயகர் உருவச்சிலை இந்த ஆலயத்தின் மற்ற சிறப்புகள் ஆகும்.

63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனாருக்கும் தனி சந்நிதி உள்ளது. அதிபத்த நாயனார் தான் பிடிக்கும் மீன்களை பக்திப் பெருக்கோடு இறைவனுக்கு அர்ப்பணித்து பூஜித்து வந்தார். ஒரு முறை ஒரே ஒரு தங்க மீன் கொடுத்து அதிபத்த நாயனாரை சோதித்து திருவிளையாடல் செய்து அவரை இறைவன் ஆட்கொண்ட திருத்தலம் இதுவாகும்.

இத்தலம் நவக்கிரகங்களில் ஒருவரான சனி பகவானுக்கு உகந்த தலம். தசரத மன்னனுக்கு சனி பகவான் தான் என்றும் இத்தலத்தில் நிலைத்திருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறான் என்பதை இத்தல புராணம் விவரிக்கிறது. இங்கு அனைத்து கிரகங்களும் சனி பகவானை மேற்குப் பார்த்தபடி இருப்பதும், சனி பகவான் தெற்குப் பார்த்தவாறு இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.