மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமுல்லைவாயில் |
| இறைவன் பெயர் | மாசிலாமணி ஈஸ்வரர் |
| இறைவி பெயர் | கொடியிடை அம்மன் |
| பதிகம் | சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | சென்னை - அரக்கோணம் புறநகர் ரயில் பாதையில் உள்ள திருமுல்லைவாயில் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. சென்னை நகரின் ஒரு பகுதியான அம்பத்தூரில் இருந்து சுமார் 3 Km தொலைவில் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| ஆலய முகவரி |
அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோவில் திருமுல்லைவாயில் அஞ்சல் திருவள்ளூர் மாவட்டம் PIN - 609113 |
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாயில் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
தல வரலாறு: காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த தொண்டை நாட்டின் அரசன் தொண்டைமான் ஒரு முறை அவனது எதிரி குறும்பர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டான். போரில் தோல்வியுற்ற தொண்டைமான் தனது யானையின் மீது மிகவும் மனம் நொந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது யானையின் கால்களை முல்லைக் கொடிகள் சுற்றிக் கொண்டன. யானை முன்னேறிச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதால் தொண்டைமான் தனது வாளினால் முல்லைக் கொடிகளை வெட்டி யானை முன்னேறிச் செல்ல வழி ஏற்படுத்தினான். அப்போது வாள் பட்டு முல்லைக் கொடிகளின் கீழே இருந்து இரத்தம் வருவதைக் கண்டான். யானையிலிருந்து கீழே இறங்கி முல்லைக் கொடிகளை விலக்கிப் பார்த்தபோது அங்கு ஒரு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தான். இறைவனை வணங்கி தான் செய்த தவறை பொருத்துக் கொள்ளும்படி அவரிடம் வேண்டினான். (இந்த தல வரலாற்றை சுந்தரர் தனது பதிகத்தில் 10வது பாடலில் குறிப்பிட்டுள்ளார். பாடல் கீழே தரப்பட்டுள்ளது.) இறைவன் அவன்முன் தோன்றி அரசனை வாழ்த்தி அருளி அவனுக்குத் துணையாக நந்தியம்பெருமானையும் போருக்கு அனுப்பினார். அரசன் குறும்பர்களுடன் மறுபடியும் போர் செய்து அதில் அவர்களை வெற்றி கொண்டான். தனக்கு உதவி செய்த இறைவனின் கருணையைப் பொற்றி சிவபெருமானுக்கு அவ்விடத்தில் ஒரு ஆலயம் எழுப்பினான். குறும்பர்களை வென்று அவர்கள் கோட்டையிலிருந்து கொண்டுவந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை தான் எழுப்பிய சிவாலயத்தில் இறைவனின் கருவறை முன்பு பொருத்தி வைத்தான். அதுவே இந்த மாசிலாமனி ஈஸ்வரர் ஆலயம் என்று தல வரலாறு கூறுகிறது. மூலவர் கருவறை முன்பு அந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களை இன்றும் காணலாம்.
தெற்கில் உள்ள இராஜ கோபுரம் இவ்வாலயத்தின் நுழைவு வாயிலாகும். தெற்கு கோபுரத்திற்கு முன் ஒரு 16 கால் மண்டபம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் பிரசன்ன கணபதி நம்மை வரவேற்கிறார். தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள மற்றொரு நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்றால் முதலில் இறைவி கொடியிடை நாயகி சந்நிதி கிழக்கு நோக்கி இருக்கிறது. அதைக் கடந்து மேலும் சென்றால் இறைவன் மாசிலாமணி ஈஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. இறைவன் மற்றும் இறைவி சந்நிதி இரண்டும் கிழக்கு நோக்கி இருப்பதும், இறைவி கொடியிடை நாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலப்புறம் இருப்பதும் இக்கோவிலின் ஒரு சிறப்பம்சமாகும்.
வாளால் வெட்டுப்பட்டதால் மாசிலாமணீஸ்வரர் குளிர்ச்சி வேண்டி எப்போதும் சந்தனக் காப்பிலேயே காட்சி தருகிறார். வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று மட்டும் பழையது நீக்கி புதிய சந்தனக் காப்பு சாத்தப்படும்.
தொண்டைமானுக்கு உதவி செய்ய புறப்படும் நிலையில் நந்தி சிவபெருமானை நோக்கி இல்லாமல் கோவில் வாசலை நோக்கி திரும்பி உள்ளது. இறைவன் கருவறை சுற்றுப் பிரகாரத்தில் மேற்குச் சுற்றில் நாலவர் திரு உருவங்கள் உள்ளன. மேலும் மேற்குச் சுற்றுச் சுவரில் 63 நாயன்மார்கள் உருவங்கள் சித்திரங்களாக காட்சி அளிக்கின்றன. கருவறையின் வடக்குச் சுற்றில் நடராஜர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. இத்தலத்து இறைவி கொடியிடை அம்மனை பௌர்ணமி நாளில் மாலை வேளையில் வழிபடுவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இத்தல முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது மூன்று பாடல்கள் உள்ளன. இக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி கிடையாது. வசிஷ்ட முனிவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து தெய்வீகப் பசு காமதேனுவை பெற்றார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது
திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்களென் றெண்ணி ஒருவரை மதியா துறாமைகள் செய்து மூடியும் உறைப்பனாய்த் திரிவேன் முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. கூடிய இலயம் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காண ஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றா யென்று தேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய் செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் மரசே தண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாட அந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல் செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால் பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய் பாசுப தாபரஞ் சுடரே. சந்தன வேருங் காரகிற் குறடுந் தண்மயிற் பீலியுங் கரியின் தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்தி வந்திழி பாலி வடகரை முல்லை வயிலாய் மாசிலா மணியே பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக் குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கையால் மிகைபல செய்தேன் செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன் பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல் அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல றாத திணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற் செல்வனே எல்லியும் பகலும் பணியது செய்வேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் தன்னையாட் கொண்ட சம்புவே உம்ப ரார்தொழு தேத்துந் தடங்கடல் நஞ்சுண்ட கண்டா செம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில் தேடியான் திரிதர்வேன் கண்ட பைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் மாணிதன் மேல்மதி யாதே கட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்த சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் செல்வனே செழுமறை பகர்ந்த பட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட் டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும் நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீ பல்கலைப் பொருளே படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே. விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத் திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவலா ரூரன் உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும் உள்குளிர்ந் தேத்தவல் லார்கள் நரைதிரை மூப்பும் நடலையு மின்றி நண்ணுவர் விண்ணவர்க் கரசே.
| சென்னை நகரிலும் அதன் அருகிலும் உள்ள மற்ற பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் | ||
|---|---|---|
| திருவொற்றியூர் | திருவலிதாயம் | திருவேற்காடு |
| திருமயிலை | திருவான்மியூர் | |