திருகோடீஸ்வரர் கோவில், திருகோடிக்கா
சிவஸ்தலம்
திருகோடிக்கா
இறைவன்
திருகோடீஸ்வரர்
இறைவி
வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி
பதிகம்
திருநாவுக்கரசர் - 3, திருஞானசம்பந்தர் - 1
திருகோடீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வந்தும் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி
திருக்கோடிகாவல்
திருக்கோடிகாவல் அஞ்சல்
நரசிங்கன்பேட்டை வழி
திருவிடைமருதூர் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 609802
ஆலய நேரம்
காலை : 7:00 - 12:30
மாலை : 4:00 - 8:30
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
தலத்தின் சிறப்பு
- சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்ற தலம்.
- அதேபோல் சித்திரகுப்தனும், துர்வாச முனிவரும் எதிரெதிர் சன்னதியில் உள்ள தலம்.
- தலத்தின் தீர்த்தமான காவேரி நதி உத்திரவாஹினியாக தெற்கிலிருந்து வடக்காக பாய்கிறது. கார்த்திகை மாதம், ஞாயிறு அன்று விடியற்காலையில் இத்தலத்தில் காவிரியில் நீராடினால், எல்லா பாவங்களும் தொலைந்துவிடும் என்பது ஐதீகம்.
- இத்தலத்தில் உள்ள சனிபகவான் பாலசனி என்று அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது.
- கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கற்றளியாக திரும்பக் கட்டப்பட்ட சிறப்பையுடைய தலம்.
- மூன்று கோடி மந்திரங்களும் சாப விமோசனம் பெற இத்தலத்திற்கு வந்து சிவனின் முன்னிலையில் சரியாக மந்தரங்களை உச்சரித்து சாப விமோசனம் பெற்ற தலம்.
- அதேபோல் மூன்று கோடி தேவர்களும் இத்தல இறைவனை வழிபட்டு ஞானமுக்தி அடைந்த தலம்.
- ஒரு சமயம் கைலாசத்தையும், திருகோடிக்காவையும் ஒரு தராசில் வைத்துப் பார்த்த போது, இத்தலம் உயர்ந்து, கைலாசம் கீழே போய்விட்டது. என்னுடைய திருமேனிக்கு சமமான பெருமை கொண்ட தலம் இது என்று சிவபெருமானால் சிலாகித்து கூறப்பட்ட தலம்.
- இத்தலத்தில் செய்யும் தியானம், ஹோமம், ஜபம், எல்லாம் மும்மடங்காகப் பலிக்கின்ற பெருமையுடைய தலம்.
கோவில் அமைப்பு
முன்பிரகாரம் மற்றும் மண்டபம்
ஐந்து நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் எதிரில் கவசமிட்ட கொடிமரமும், கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தியும் காட்சி தருகின்றன. முன்மண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி உள்ளது. வடிவாம்பிகை நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். உட்பிரகார வலத்தில் கரையேற்றும் விநாயகர், மயில்வாகனர், சிவலிங்கமூர்த்தங்கள், கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, காலபைரவர், சூரியன், சந்திரன், சனிபகவான், துர்வாசர் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தனவிநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வலம் முடித்து உள்மண்டபம் சென்று துவார விநாயகரையும் பாலசுப்பிரமணியரையும் தரிசித்து வாயில் கடந்தால் நேரே மூலவர் தரிசனம். மூலவர் கருவறை செல்லும் வழியில் இருபுறமும் சித்தரகுப்தரும், எமதர்மனும் உள்ளனர். இது இத்தலத்தின் விசேஷ அமைப்பாகும். திருகோடீஸ்வரர் சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு லிங்க உருவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.
உட்பிரகாரம் மற்றும் கருவறை
கருவறை மேற்கு சுற்றில் முதலில் உள்ள அறையில் நாகலிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி மற்றும் மனோன்மணி அம்பாள் விக்ரகங்கள் உள்ளன. அடுத்துள்ள சந்நிதியில் ஆறுமுகம், பன்னிரண்டு கைகள். கைகளில் நாககனி, வில், பாணம் மற்றும் பிற படைக்கலங்களோடு வள்ளி, தெய்வானையுடன் அசுரமயில் வாகனத்தில் முருகர் காட்சியளிக்கிறார். இதை அடுத்து ரிக், யஜுர், சாம, அதர்வண என்னும் நான்கு வேத சிவலிங்கங்கள் காணப்படுகிறது. அடுத்து கஜலட்சுமி விக்ரகம் இரு கால்களையும் தொங்கவிட்டுக் கொண்ட நிலையில் உள்ளது. இறுதியில் சனீஸ்வரனின் மனைவியான ஜேஷ்டாதேவி, மகன் மாந்தி, மகள் மாந்தாவுடன் உள்ள சிலை உள்ளது. மாந்தாவின் கையில் தாமரை மலரும், மாந்தியின் முகம் ரிஷப முகமாயும், இம்மூன்றும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அற்புதமாய் காட்சியளிக்கிறது. வடக்குச் சுற்றில் கோயிலின் தல விருட்சமான பிரம்பு மரம் உள்ளது. அடுத்து அஷ்டபுஜ துர்க்கை சந்நிதியும், அதையடுத்து சண்டிகேஸ்வரர் தனிச்சந்நிதியும், அருகில் புஷ்கரணியும் (கிணறு) உள்ளது. இதைக்கடந்து சென்றால் பிரம்மாவுக்கு என்று ஒரு சிறு தனி சந்நிதி உள்ளது.
சிற்பங்களின் சிறப்பு
ஆலயத்தில் சிற்பங்களுக்கு பஞ்சமில்லை. சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. இராஜகோபுர வாயிலில் காமதேனு, கற்பக விருட்சம், குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள், மனுநீதி சோழன் நீதிவரலாறு, கண்ணனின் கோகுல லீலைகள், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன. இதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் நடராஜர் சிற்பம் உள்ளது. இடதுபுறம் சிவகாமியும், வலதுபுறம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர், மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர், விஷ்ணுவின் மோகினி அவதாரம், ஒரு குள்ளபூதம், அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. ஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி, அஷ்டபுஷ துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார். கிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.
தல வரலாறு
எமபயம் நீக்கும் தலம்
சிவபுராணத்தில் பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் விவரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி இத்தலத்தின் மகிமைக்கு மேலும் சிறப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது. தன் கணவனைக் கொன்றுவிட்டு, நெறி தவறி தன் வாழ்க்கையை நடத்தி வந்த லோக காந்தா என்ற பெண்மணி, வாழ்க்கையின் இறுதிகாலத்தில் திருக்கோடிக்கா வந்து தங்க நேர்ந்தது. அவள் மரணமடைந்ததும் யமதூதர்கள் அவளைத் தண்டிக்க நரகலோகம் அழைத்துச் செல்லுகின்றனர். சிவ தூதர்கள் இதை வன்மையாக கண்டிக்கின்றனர். யமதர்மராஜன் சிவபெருமானிடம் வந்து முறையிடுகிறார். தமது தலமான திருக்கோடிக்காவோடு சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க யமனுக்கு அதிகாரம் இல்லை என்றும், காலதேச வர்த்தமானங்களால் இங்கு வந்தவர்களை எமன் கண்ணெடுத்தும் பார்க்கக் கூடாது என்றும், திருகோடிக்கா என்ற ஒலியை காதால் கேட்டவர்களைக் கூட தண்டிக்கும் உரிமை யமனுக்கு இல்லை என்றும், அந்த மண்ணை மிதித்தவர்களிடம் அவன் நெருங்கவே கூடாது என்றும் கட்டளையிடுகிறார். லோககாந்தா என்ற அந்தப் பெண்மணி இத்தலத்தில் சம்பந்தப்பட்டுவிட்டதால், யமனிடமிருந்து விடுபட்டு, பின் முக்தி அடைகிறாள். காசியைப் போல இத்தலத்தில் வாழ்பவர்களுக்கும் யமபயம் கிடையாது. இந்த நம்பிக்கையை உறுதி செய்வது போல, இவ்வூரில் மயானம் தனியாக இல்லை. இவ்வூரில் மறிப்பவர்களை, காவிரி நதியின் மறுகரைக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வழக்கம் தொன்று தொட்டு இன்று வரை தொடர்கிறது.
பதிகம்
திருஞானசம்பந்தர்
திருகோடீஸ்வரர் ஆலயம் மேலும் புகைப்படங்கள்