சாட்சி நாதேஸ்வரர் திருக்கோவில், திருப்புறம்பியம்
சிவஸ்தலம்
திருப்புறம்பியம்
இறைவன்
சாட்சி நாதேஸ்வரர்
இறைவி
கரும்பன்ன சொல்லம்மை
பதிகம்
திருநாவுக்கரசர் - 1, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
சாட்சி நாதேஸ்வரர் ஆலயம் – புகைப்படங்கள்
எப்படிப் போவது
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் இருக்கும் புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருஇன்னாம்பர் திருத்தலத்தை அடுத்து அதே சாலையில் மேலும் சுமார் 3 கி.மீ. சென்றால் திருப்புறம்பியம் என்ற பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவிலுள்ள திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு.
ஆலய முகவரி
திருப்புறம்பியம்
திருப்புறம்பியம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 612303
ஆலய நேரம்
காலை : 9:00 - 12:00
மாலை : 5:00 - 8:00
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
தல வரலாறு
பிரளயம் புறம்பாக நின்ற தலம்
ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெருவெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயரைப் பெற்றது. பிரளயம் ஏற்பட்ட போது சப்த சாகரத்தின் நீரையும் இத்தலத்திலுள்ள கிணற்றில் அடங்கிவிடும்படி விநாயகர் செய்தமையால் இத்தலத்து விநாயகர் பிரளயம் காத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
சாட்சி நாதர் வரலாறு
மதுரையில் வசிக்கும் வணிகன் ஒருவன் உடல்நிலை சரியில்லாத தன் மாமனைப் பார்க்க திருப்புறம்பியம் வந்தான். மாமன் இறக்கும் தருணம் தன் மகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு கண்ணை மூடினான். அவளையும் அழைத்துக் கொண்டு மதுரை செல்லுமுன் வணிகன் இத்தல ஆலயத்திற்கு வந்தான். இரவு தங்கியிருந்த போது அரவு கடித்து இறந்து விட்டான். அப்பெண் சிவபெருமானிடம் முறையிட்டாள். இறைவன் வணிகனை உயிர்ப்பித்து அவளுக்கு மணமுடித்தார்.
பெண்ணை கூட்டிக் கொண்டு மதுரை சென்ற வணிகன் அங்கிருந்த தன் முதல் மனைவியிடம் விபரம் கூறி வாழ்ந்து வந்தபோது வணிகனின் முதல் மனைவி, இரண்டாவது பெண்ணுடன் தன் கணவனுக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவள் மானம் கெட்டவள் என்றும் பழி கூறினாள். இரண்டாம் மனைவி திருப்புறம்பியம் இறைவனை நோக்கி முறையிட வன்னிமரம், மடைப்பள்ளி, கிணறு இவற்றோடு மதுரை சென்று திருமணம் நடந்ததற்குச் சாட்சி பகர்ந்தார். வணிகப் பெண்ணின் பொருட்டு மதுரைக்கு எழுந்தருளி சாட்சி கூறியதால் இத்தல இறைவனுக்கு சாட்சிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.
சாட்சி சொன்ன வரலாறு திருவிளையாடற் புராணத்திலும், தலபுராணத்திலும் வருகிறது. மதுரை சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் ஈசான்ய மூலையில் சாட்சி கூறிய படலத்திற்குச் சான்றாக இப்போதும் வன்னிமரமும், மடைப்பள்ளியும் இருப்பதைக் காணலாம். செட்டிப்பெண்ணுக்கு இறைவன் திருமணம் நடத்தி வைத்ததற்கு சாட்சியாக இருந்த வன்னிமரம் இத்தலத்தின் இரண்டாம் பிரகாரத்திலுள்ளது. ஆனால் இம்மரம் தலமரமன்று. தலமரம் புன்னைமரமே.
கோயில் அமைப்பு
இராஜகோபுரம் மற்றும் வெளிப் பிரகாரம்
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 5 நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறது. கோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோவிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடி கொண்டுள்ளார். தமிழகத்திலேயே தனிக்கோவிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது ஒன்று தான். கோபுர வாயில் வழியே உள்ளே சென்றவுடன் நாம் காண்பது விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம். நேரே பலிபீடம், நந்தி மண்டபம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நந்தி மண்டபத்தின் விமானத்தில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சுதை சிற்பங்களைக் காணலாம்.
மூலவர் சாட்சி நாதேஸ்வரர்
முதற் பிராகாரத்தில் நால்வர், அகத்தியர், புலஸ்தியர், சனகர், சனந்தனர், விசுவாமித்திரர் முதலியோர் வழிபட்ட லிங்கங்கள் முதலியவை உள்ளன. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுவாமி கருவறை சுற்றுச் சுவர்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்களைக் காணலாம். ஆனால் அநேக சிற்பங்கள் பின்னப்பட்டு காட்சி தருவது வேதனைக்குரிய விஷயம்.
அம்பாள் மற்றும் தட்சிணாமூர்த்தி
இரண்டாவது பிராகாரத்தில் அம்பாள் கோயில் உள்ளது. குளத்தின் தென்கரையில் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. கோவிலுக்கு விறகு கொண்டுவந்த ஒரு ஏழைக்கு இறைவன் தட்சிணாமூர்த்தி ரூபமாகத் தரிசனம் கொடுத்தவர் இவர்தான். இதற்கு மேலே சட்டைநாதர் சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்திக்குரிய முக்கியத் தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.
தலப் பெருமை – பிரளயம் காத்த விநாயகர்
இத்தலத்திலுள்ள விநாயகர் வருண பகவானால் உருவாக்கப்பட்டவர். நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல்நுரை போன்ற கடல் சார்ந்த பொருட்களால் விநாயகர் திருமேனியை உருவாக்கினார். இந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தியன்று இரவு முழுவதும் தேன் கொண்டு அபிஷேகம் நடைபெறும். அபிஷேகம் செய்யப்பெறும் தேன் யாவும் விநாயகர் திருமேனியில் உறிஞ்சப்பட்டுவிடும். வேறு நாட்களில் இந்த விநாயகருக்கு எந்த விதமான அபிஷேகமும் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பதிகம்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
சாட்சி நாதேஸ்வரர் ஆலயம் – மேலும் புகைப்படங்கள்