சிவஸ்தலம் பெயர்: பழையாறை வடதளி
இறைவன் பெயர்: சோமேஸ்வரர் - பழையாறை, தர்மபுரீஸ்வரர் - வடதளி
இறைவி பெயர்: சோமகமலாம்பிகை - பழையாறை, விமலநாயகி - வடதளி
பதிகம்: திருநாவுக்கரசர் - 1
சோமேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பழையாறை வடதளி என்ற இந்த இரட்டை சிவஸ்தலம் இருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருநந்திபுர விண்ணகரம் என்ற கோவில் பழையாறைக்கு அருகில் உள்ளது. பட்டீஸ்வரத்தில் இருந்து அருகாமையில் உள்ளது.
ஆலய முகவரி
பழையாறை
பட்டீஸ்வரம் அஞ்சல்
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்
PIN - 612703
ஆலய நேரம்
காலை: 8:00 - 12:00
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்திருக்கும். அருகில் மெய்காப்பாளர் வீடு இருப்பதால் எந்நேரமும் தரிசிக்கலாம்.
அருகில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலம்
| 1 | திருவலஞ்சுழி - 4.4 கிமி | |
| 2 | திருக்குடமூக்கு (கும்பகோணம்) - 5 கிமி |
பயண குறிப்பு
கும்பகோணத்தில் இருந்து தனியார் வாகனம், சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனம் போன்றவற்றில் பயணம் தொடங்கினால், SCT019 முதல் SCT023 வரை உள்ள 5 சிவஸ்தலங்களை ஒரே சுற்றில் வழிப்படலாம், ஏனெனில் இவை அனைத்தும் ஒரே பாதையில் அமைந்துள்ளன. காலை அல்லது மாலை வேளையில் பயணத்தை திட்டமிட்டால், முதலில் திருப்பாலைத் துறையில் தொடங்கி, கடைசியாக பட்டீஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்யலாம். பட்டீஸ்வரம் ஒரு முக்கியமான திருத்தலம் என்பதால், அது பொதுவாக நீண்ட நேரம் திறந்திருக்கும்.
காலை நேரத்தில் பயணத்தை தொடங்கினால், அனைத்து கோவில்களையும் மதிய உணவு நேரத்திற்குள் தரிசித்து முடிக்கலாம். அதேபோல், மாலை நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து மூன்று மணி முப்பது நிமிடம் அளவில் பயணத்தை தொடங்கினால், அனைத்து கோவில்களையும் இரவு உணவு நேரத்திற்குள் தரிசித்து முடிக்கலாம்.
SCT019 முதல் SCT024 வரை இணைக்கும் வரைபடம்வடதளி - தர்மபுரீஸ்வரர் கோவில்
பழையாறை வடதளி என்று அழைக்கப்படுமிடம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து வழியாகச் சிறிது தூரத்தில் இருக்கிறது. ஊர் என்று சொல்லும் அளவிற்கு வீடுகள் அதிகம் இல்லை.
சோழ மன்னன் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களில் ஒன்றாக கருதப்படும் வடதளி கோவில் மிகவும் சிதிலமான நிலையில் காணப்படுகிறது. திருநாவுக்கரசர் இந்த வடதளிக்கு வந்திருக்கிறார்.
சமண எதிர்ப்பு வரலாறு
அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோவிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருந்தார்கள். திருநாவுக்கரசர் பிடிவாதமாக சிவனை வழிபடாமல் திரும்ப மாட்டேன் என்று அங்கேயே தங்கி உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார். இறைவனும் அந்த நாட்டு அரசன் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணர்களை அடக்குமாறு சொல்ல, அரசன் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரர் வெளிப்பட்டார்.
இக்கோவிலில் மூலவர் தர்மபுரீஸ்வரர் சந்நிதியும், அம்பாள் விமலநாயகி சந்நிதியும் தவிர வேறு பார்ப்பதற்கு குறிப்பாக ஒன்றும் இல்லை. வடதளியிலுள்ள தர்மபுரீஸ்வரர் ஆலயமே அப்பர் பெருமானால் பதிகம் பாடப்பெற்ற சிவஸ்தலம்.
பழையாறை - சோமேஸ்வரர் கோவில்
பட்டீஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து ஆவூர் செல்லும் வழியில் திருமலைராயன் ஆற்றுப் பாலம் கடந்து பின் முடிகொண்டான் ஆற்றுப் பாலத்திற்கு சற்று முன்னாலுள்ள தேனாம்படுகை என்ற இடத்தில் இடதுபறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் பழையாறை சோமேஸ்வரர் கோவில் வந்து அடையலாம்.
சோழர் காலத்து சிற்பப் பணிக்கு எடுத்துக் காட்டாக இக்கோவில் வாயில் சுவரும், சுவரில் உள்ள சிற்ப வடிவங்களும் அமைந்துள்ளன. இக்கோவிலும் வடதளி கோவிலைப் போன்றே மிகவும் சிதிலமான நிலையில் இருக்கிறது.
கோவில் அமைப்பு
முற்றுப் பெறாத முதல் கோபுரத்தின் வழியாக கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் அம்பாள் லோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இங்குள்ள படிக்கட்டுகளில் பிரகலாத சரித்திரச் சிற்பங்கள் செதுக்கபட்டிருகின்றன.
இரண்டாவது கோபுரம் 3 நிலைகளை உடையது. இதன் வழியே உள்ளே சென்றால் நான் காண்பது முன் மண்டபம். பக்கவாட்டிலுள்ள படிக்கட்டுகள் மூலம் எறிச் சென்று முன் மண்டபம் தாண்டி அர்த்த மண்டபம், அதன்பின கருவறையில் மூலவர் சோமேஸ்வரர் சந்நிதி அமைந்துள்ளது.
சிறப்பு சந்நிதிகள்
வீரதுர்க்கை சந்நிதி
அருகில் அர்த்த மண்டபத்தில் உள்ள வீரதுர்க்கை சந்நிதியும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த வீரதுர்க்கையை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இராகு காலத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் சகல செயகரியங்களும், செயபாக்கியமும் கிடைக்கும் எனபது ஐதீகம்.
கடன் தீர்க்கும் கைலாசநாதர்
இந்த வீரதுர்க்கை சந்நிதிக்கு அருகில் கடன் தீர்க்கும் கைலாசநாதர் லிங்கம் உள்ளது. இந்த கைலாசநாதரை 11 மாதம் அல்லது 11 வாரம் அல்லது 11 திங்கள், சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் கடன் சுமை, மனச்சுமை தீரும் என்பது ஐதீகம்.
பிற சந்நிதிகள்
மூலவர் கருவறைச் சுற்றில் நால்வர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடனுள்ள முருகர் சந்நிதி மற்றும் நவக்கிரக சந்நிதிகளும் உள்ளன. கோவிலுக்கு வெளியே சோம தீர்த்தம் உள்ளது.
வரலாற்று குறிப்பு
தேவாரம் பாடப் பெற்ற காலத்தில் பழையாறை நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது. வடதளி, மேற்றளி, கீழ்த்தளி மற்றும் தென்தளி ஆகிய பிரிவுகளாக இருந்த இந்தப் பழையாறையில் நான்கு சிவன் கோவில்களும் இருந்தன. அவற்றில் இன்று வடதளி தர்மபுரீஸ்வரர் கோவிலும், கீழ்த்தளி சோமேஸ்வரர் கோவிலும் மட்டுமே உள்ளன.
இவ்வூருக்கு தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது. அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.
பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்
அப்பர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
மேலும் புகைப்படங்கள்