மகுடேஸ்வரர் கோவில், திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
சிவஸ்தலம் பெயர்: திருப்பாண்டிக்கொடுமுடி
இறைவன் பெயர்: கொடுமுடிநாதர், மகுடேஸ்வரர்
இறைவி பெயர்: வடிவுடைநாயகி, சௌடாம்பிகை
பதிகம்: சுந்தரர் - 1, திருஞானசம்பந்தர் - 1, திருநாவுக்கரசர் - 1
திருப்பாண்டிக்கொடுமுடி ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து வடமேற்கே சுமார் 26 கி.மீ. தொலைவிலும் கொடுமுடி உள்ளது. கொடுமுடி ரயில் நிலயம் திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது. ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 முதல் 10 நிமிட நடை தொலைவில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி
கொடுமுடி
ஈரோடு வட்டம்
ஈரோடு மாவட்டம்
PIN - 638151
ஆலய நேரம்
காலை: 6:00 - 12:30
மாலை: 4:00 - 8:00
தல வரலாறு
ஒருமுறை ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த பேட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.
ஐந்து மணிகளும் ஐந்து தலங்களும்
- வைரம் வீழ்ந்த இடம் - கொடுமுடி
- சிவப்பு மணி வீழ்ந்த இடம் - திருவண்ணாமலை
- மரகத மணி வீழ்ந்த இடம் - ஈங்கோய் மலை
- மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் - ரத்தினகிரி (திருவாட்போக்கி)
- நீல மணி வீழ்ந்த இடம் - பொதிகை மலை
மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.
கோவில் அமைப்பு
ஆலய இருப்பிடம்
வடக்கிலிருந்து தெற்காக ஓடிவரும் காவிரி நதி கொடுமுடி சிவஸ்தலத்தில் கிழக்கு நோக்கி திரும்பி ஓடுகிறது. காவிரி நதியின் மேற்குக் கரையில் கொடுமுடிநாதர் கோவில் அமைந்துள்ளது. கிழக்குப் பார்த்து அமைந்துள்ள இக்கோவில் சுமார் 640 அடி நீளமும், சுமார் 484 அடி அகலமும் உடையதாய் அமைந்திருக்கிறது.
மும்மூர்த்திகள் சந்நிதிகள்
இக்கோவிலில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரஙளும், தனித்தனி சந்நிதிகளும் அமைந்துள்ளன. இக்கோவிலுக்கு மூன்று வாயில்கள் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளன. நடு கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் விஷ்ணு மற்றும் பிரம்மாவின் சந்நிதிகளுக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு வடபுறம் உள்ள கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றால் மூலவர் கொடுமுடி நாதர் சந்நிதிக்குச் செல்லலாம். நடு வாயிலுக்கு தென்புறம் உள்ள கோபுர வாயில் வழியாக இறைவி வடிவுடை நாயகியின் சந்நிதிக்குச் செல்லலாம்.
மூலவர் சந்நிதி
இக்கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும். குட்டையான சிவலிங்கத்தின் ஆவடையார் சதுர வடிவில் உள்ளது. பாணத்தின் மீது விரல் தடயங்களக் காணலாம். அகத்தியர் இத்தல இறைவனை பூஜை செய்த போது ஏற்பட்ட விரல் தடயங்கள் என்பது ஐதீகம்.
கோஷ்டங்கள் மற்றும் பிற சந்நிதிகள்
மூலவர் சந்நிதி கோஷ்டங்களில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோரைக் காணலாம். சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. இதுபோன்று அமைபுள்ள தலங்கள் கல்யாண தலங்கள் என்று போற்றப்படும்.
அம்பாள் சந்நிதி மற்றும் பிற சந்நிதிகள்
அம்பாள் சந்நிதி
அம்பாள் சந்நிதி உட்பிரகாரத்தில் வல்லப கணபதி, சோழீஸ்வரர், விஸ்வேசர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சப்தமாதர்கள் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாள் சந்நிதியில் சரஸ்வதிக்கும் தனி சந்நிதி உள்ளது.
மற்ற சந்நிதிகள்
இக்கோவிலில் உமா மகேசுவரர், அகஸ்தீஸ்வரர், கஜலக்ஷ்மி, சுப்பிரமணியர் சந்நிதிகளும் உள்ளன. தென்கிழக்கு மூலையில் சூரியனுக்கும், வடகிழக்கு மூலையில் சந்திரனுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. வடதிசையில் பைரவர், சனீஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.
வன்னி மரம் மற்றும் பிரம்மா சந்நிதி
2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரம்
இறைவி வடிவுடை நாயகி சந்நிதியின் பின்புறம் மேற்கில் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது. இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது.
வன்னி மரத்தின் சிறப்புகள்
- ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப்பதில்லை
- இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாட்களானாலும் தண்ணீர் கெடுவதில்லை
- பழனி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுத் தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்
பெருமாள் கோவில்
பிரம்மாவின் கோவிலுக்கு வடமேற்கில் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் மற்றும் வீரநாரயண பெருமாள். பெருமாள் கோவிலுக்கு வெளியே திருமங்கை நாச்சியாருக்கும், ஹனுமானுக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. இக்கோவிலில் உள்ள பிரம்மாவும், பெருமாளும் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.
தீர்த்தங்கள்
ஆலயத்தின் தீர்த்தங்கள்
- காவிரி நதி
- வன்னிமரம் அருகிலுள்ள தேவ தீர்த்தம்
- பாரத்வாஜ தீர்த்தம்
- மடப்பள்ளிக்கு அருகிலுள்ள பிரம்ம தீர்த்தம்
பரிகார பலன்கள்
காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் நீராடி, இறைவனையும், மகாவிஷ்ணுவையும் வழிபட பிணிகளும், பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்ற குற்றங்களும், மனநோயும் நீங்கும்.
பதிகம்திருப்புகழ்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
திருநாவுக்கரசர் அருளிய இத்தலத்து பதிகம்
சுந்தரர் அருளிய இத்தலத்து பதிகம்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
மேலும் புகைப்படங்கள்
கூகுள் வரைபடம்