அதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில், திருஅறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்)
சிவஸ்தலம் பெயர்: திருஅறையணிநல்லூர் (தற்போது அரகண்டநல்லூர் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்: அதுல்யநாதேஸ்வரர், அறையணிநாதர், ஒப்பில்லாத ஈஸ்வரர்
இறைவி பெயர்: அழகிய பொன்னம்மை, ஸ்ரீசெளந்திர கனகாம்பிகை
பதிகம்: திருஞானசம்பந்தர் - 1
அதுல்யநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது
திருக்கோவிலூருக்கு எதிர்க்கரையில் பெண்ணையாற்றின் வடகரையில் உள்ள ஒரு சிறு குன்றின் மீது திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவிலூரில் இருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலத்திற்கு வர நகரப் பேருந்து வசதி உண்டு. விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து திருக்கோவிலூர் வர பேருந்து வசதிகள் இருக்கின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை இங்கிருந்து 35 கி.மி. தொலைவில் இருக்கிறது. விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கி.மி. தொலைவு. திருக்கோவிலூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள சிவன் கோவில் தெரு வழியாக (300 மீட்டர்) கோவிலை அடையலாம்.
நடு நாடு - பயண குறிப்புகள்
முதலில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில் ஏறி அரகண்ட நல்லூர், திருக்கோவிலூர் தரிசித்து விட்டு, திருக்கோவிலூரில் இருந்து கடலூர் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் பேருந்தில் ஏறி முதலில் இடையாறு தலத்தையும், பிறகு திருவெண்ணெய் நல்லூர் சென்று, அங்கிருந்து திருமுண்டீச்சரம் சென்று தரிசனம் செய்து அரசூர் வழியாக மீண்டும் விழுப்புரம் அடையலாம்.
அருகில் உள்ள தலங்கள்
| 1 | திருக்கோவிலூர் - 3 கி.மீ | |
| 2 | திருவண்ணாமலை - 35 கி.மீ | |
| 3 | த்ரிவிக்ரம பெருமாள் கோவில் - திவ்யதேசம் - 3.5 கி.மீ |
ஆலய முகவரி
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 605752
ஆலய நேரம்
காலை: 8:00 - 12:00
மாலை: 4:00 - 8:00
கோவில் அமைப்பு
இவ்வாலய ராஜகோபுரம் ஏழுநிலைகளை உடையது. ராஜகோபுரம் ஒரு பெரிய பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிரகாரத்தில் வலம்புரி விநாயகர் உள்ளார். இவரே இத்தலத்தின் தலவிநாயகர். விநாயகருக்கு முன்பு இடதுபுறம் கையில் தாளமேந்திய நிலையில் ஞானசம்பந்தர் திருமேனி உள்ளது. விநாயகரின் பக்கத்தில் விஸ்வநாத லிங்கம் உள்ளது.
அடுத்த வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் கருவறையை அடையலாம். கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறைச் சுற்றில் நவக்கிரக சந்நிதி, பைரவர், கல்லில் வடித்துள்ள நாராயணர், நர்த்தன கணபதி, சக்கரதாரியாக நின்ற நிலையில் மகாவிஷ்ணு ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. சப்தமாதாக்கள் வரிசையாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளனர். மூலவர் அதுல்யநாதேஸ்வரர் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நடராஜர் சபையும் உள்ளது. வெளிச் சுற்றில் அண்ணாமலையார் சந்நிதி உள்ளது.
அம்பாள் தனிக்கோயிலில் தெற்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் கூடிய நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.
சிறப்பு அம்சங்கள்
முருகன் சந்நிதி
இத்தலத்திலுள்ள முருகன் திருமேனி ஒருமுகத்துடனும், ஆறுகரங்களுடனும் வள்ளிதெய்வயானை சமேதராக வடக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கைகளில் ஆயுதங்கள் உள்ளன.
பீமன் குளம்
கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில் உள்ளது பீமன் குளம். பாஞ்சாலி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாக புராணச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
குடைவரை அறைகள்
ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. பஞ்ச பாண்டவர் வனவாசத்தின் போது இங்கு தங்கி இருந்ததாகக் கூறுவர். இப்போது உள்ளே ஏதுமில்லை. வனவாசம் முடிந்து, 18 நாட்கள் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் குடும்பத்தினரோடு மீண்டும் இங்கு வந்து வழிபட்டுச் சென்றனராம்.
வரலாற்று சிறப்பு
பாண்டவர் வழிபாடு
பாண்டவர்கள் இவ்விறைவனை வழிபட்டுச் சென்று இழந்த நாட்டை மீண்டும் பெற்றதுபோல, பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால் இறைவன் அருளால் மீண்டும் அவற்றைப் பெறலாம்.
சம்பந்தர் வரலாறு
திருஞானசம்பந்தர் இந்த தலத்திற்கு வந்த போது சமணர்களால் இந்த கோவில் பெரும் பாறைகளை கொண்டு உள் பக்கமாக அடைக்க பெற்று இருந்தது. சம்பந்தர் பதிகம் பாடி முடித்தவுடன் பாறைகள் விலகி கதவு திறக்கபட்டது.
திருவண்ணாமலை தரிசனம்
இந்த கோவிலின் வடக்கு திசையில் கொடி மரத்தின் அருகில் இருந்து பார்க்கும் போது 35 கிமீ தொலைவில் உள்ள திருவண்ணாமலை இன்றும் தெரிகிறது. அருகில் திருஞானசம்பந்தர் திருவடிகள் பொறிக்கபட்டு உள்ளது. இந்த இடத்தில் இருந்து தான் திருஞானசம்பந்தர் திருவண்ணாமலை இறைவனின் அடியும் முடியும் கண்டு "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்" என்ற பதிகம் பாடினார்.
சம்பந்தர் அருளுரை
திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் தனது பதிகத்தில் அரகண்டநல்லூர் இறைவனை தலையினால் தொழும் பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர் என்றும், பழிபாவங்கள் நீங்கப் பெறுவர் என்றும், அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய வினைகள் மாயும் என்றும், பாவங்களும் கழியும் என்றும், சிவபிரான் திருவடிகளைத் தொழுது போற்ற குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.
பதிகம்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
மேலும் புகைப்படங்கள்