A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
வாமனபுரீஸ்வரர் திருக்கோவில், திருமாணிகுழி

சிவஸ்தலம் பெயர்: திருமாணிகுழி

இறைவன் பெயர்: வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர்

இறைவி பெயர்: அம்புஜாட்சி, மாணிக்கவல்லி, உதவிநாயகி

பதிகம்: திருஞானசம்பந்தர் - 1

வாமனபுரீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்
எப்படிப் போவது

கடலூர் நகரில் இருந்து சுமார் 10 கீ.மீ. தொலைவில் திருமாணிகுழி உள்ளது. பேருந்து வழிதட எண்கள் : 16 (பண்ருட்டி மற்றும் கடலூரில் இருந்து); 14, 15, 37 ( கடலூரில் இருந்து திருமாணிக்குழி வழியாக அருகில் உள்ள ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்)

வழி 1

கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து எண் 14 திருமாணிகுழி வழியாகச் செல்கிறது. இதில் வந்தால் கோயிலின் வாயிலிலேயே இறங்கலாம்.

வழி 2

கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம் வழியாக நடுவீரப்பட்டி செல்லும் பேருந்தில் சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம்.

வழி 3

கடலூரில் இருந்து திருவஹீந்திபுரம், பாலூர் வழியாக பண்ருட்டி செல்லும் பேருந்தில் (30 - 45 நிமிட இடைவெளியில் உள்ளது) சென்று திருமாணிகுழி நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் சாலை ஓரத்திலுள்ள கோவில் அடையலாம். ஆட்டோ வசதிகள் எதுவும் இல்லை.

அருகில் உள்ள தலங்கள்
1 தேவநாதஸ்வாமி திருக்கோவில், திருவஹீந்திபுரம் - திவ்ய தேசம் - 4 கீ.மீ.
2 திருவதிகை - 16 கிமி
2 திருப்பாதிரிப்புலியூர் - 9 கிமி
ஆலய முகவரி
அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திரபுரம்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 607401
ஆலய நேரம்

காலை: 7:00 - 11:30
மாலை: 4:00 - 8:00

மூலவர் தரிசன நேரம்

காலை: 9:00 - 11:30
மாலை: 5:00 - 8:00

வரைபடம் – வாமனபுரீஸ்வரர் கோவில், திருமாணிகுழி
கோவில் அமைப்பு
கோவிலின் அமைப்பு

தலமும் கோயிலும் கெடிலந்தியின் தென் கரையில், காப்பர் குவாரி என்று அழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் உள்ளன. கிழக்கு நோக்கிய இந்த ஆலயத்திற்கு 5 நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம்.

வெளிப் பிரகார சந்நிதிகள்

தெற்குப் வெளிப் பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதியும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளன. வெளிப் பிரகாரத்திலுள்ள பக்கவாட்டு வாயில் வழியே உள் பிரகாரத்தை அடையலாம்.

உள் பிரகார சந்நிதிகள்

இந்த உள் பிரகாரத்தில் விநாயகர், 63 மூவர், சப்தமாதாக்கள், யுகலிங்கங்கள், கஜலட்சுமி சந்நிதிகள் ஆகியவை அமைந்துள்ளன. உள்ளே கருவறையில் மூலவர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார்.

தலவிருட்சமும் தீர்த்தமும்

இத்தலத்தின் தலமரமாக கொன்றையும், தீர்த்தங்களாக சுவேத தீர்த்தம் மற்றும் கெடில நதியும் விளங்குகின்றன.

கோவிலின் சிறப்பு
தனிச்சிறப்பு

இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பம்சம் இங்கு மூலவரை நாம் நேரடியாக தரிசிப்பது இயலாது. ஏனெனில் எந்நேரமும் மூலவர் சந்நிதியில் திரை போடப்பட்டிருக்கும். இறைவனும், இறைவியும் எப்போதும் சிவசக்தியாக சேர்ந்திருக்கும் தலமாக இது கருதப்படுவதால் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு திரையிடப்பட்டிருக்கிறது.

பீமருத்திரர் காவல்

இறைவன் எப்போதும் இறைவியுடன் இருப்பதாகச் சொல்லப்படுவதால், இத்தலத்தில் அர்த்தசாம பள்ளியறை வழிபாடு என்பது தனியே கிடையாது. மேலும் மகாவிஷ்ணு மாணியாக, அதாவது பிரம்மசாரியாக வழிபடுவதற்கு இடையூறு இல்லாமல் காவலாக பீமருத்திரர் உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

தீபாராதனை சிறப்பு

தீபாராதனையின் போது மட்டும் திரையை விலக்கி சற்று நேரம் மட்டும் இறைவனை தரிசிக்க அர்ச்சகர்கள் வாய்ப்பு தருவார்கள். அச்சமயம் மட்டுமே சிறிய ஆவுடையார் மீதுள்ள சிறிய சிவலிங்கத் திருமேனியை தரிசிக்கும் பேறு கிடைக்கும். இறைவனை மறைத்திருக்கும் திரைச்சீலையில் பீமருத்திரர் உருவம் சித்திரமாய் தீட்டப்பட்டுள்ளது.

வழிபாட்டு முறை

ஆலய வழிபாடுகளில் அர்ச்சனை, பூஜை முதலியன முதலில் பீமருத்திரருக்குத் தான் நடைபெறும். பின்னர் அவர் அனுமதி பெற்று மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.

புராண வரலாறு
திருமால் வழிபாடு

திருமால் பிரம்மசாரியாக வந்து மாகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவனையழித்த பழிதீர இங்கு வந்து சிவபெருமானை ஒரு குழி போன்ற இடத்தில் அமர்ந்து வழிபட்டார் ஆகையால் இக்கோயில் மாணிகுழி என்று பெயர் பெற்றது. (மாணி என்றால் பிரம்மசாரி). இத்தலத்தை சம்பந்தர் உதவிமாணிகுழி என்றே தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

உதவிநாயகர் என்ற பெயர்

உதவி என்பது ஊர்ப் பெயராக இருந்து, காலப்போக்கில் மாணிகுழி என்னும் கோயிற் பெயரே ஊருக்குப் பெயராகியிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் வடநாட்டு வணிகன் அத்ரி என்பவன் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது திருடர்கள் கொள்ளையடிக்க முற்பட, அவன் இறைவனை தியானித்து உதவி கேட்டு முறையிட, இறைவனும் அவ்வணிகனை திருடர்களிடமிருந்து காத்து உதவி புரிந்தார். இதனால் இத்தலம் உதவி என்றும் இறைவன் உதவிநாயகர் என்றும் இறைவி உதவி நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இதற்கு மேலும் சான்றாகக் கல்வெட்டிலும் இத்தலம் "உதவி" என்றே குறிக்கப் பெறுகின்றது.

அருணகிரிநாதர் பாடல்

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் ஆறுமுகப்பெருமான் 12 திருக்கரங்களுடன் மயில் மீது அமர்ந்து தனது தேவியர் இருவரும் உடன் நிற்க கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மயில் வடக்கு நோக்கி உள்ளது. திருவாசி இல்லை.

பதிகம் திருப்புகழ்
திருஞானசம்பந்தர் அருளிய இத்தலத்து பதிகம்
  1. பொன்னியல் பொருப்பரையன்
அருணகிரிநாதர் அருளிய இத்தலத்து திருப்புகழ்
  1. மதிக்கு நேரெனும் வாண்மூகம்
மேலும் புகைப்படங்கள்